சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே பாலமலையான் காட்டைச் சேர்ந்தவர் மாரிமுத்து(52), தறித்தொழிலாளி. மனைவியை பிரிந்து தாய் குப்பாயியுடன் வசித்து வந்தார். போதையில் அப்பகுதியில் வசிக்கும் பெண்களிடம் ஆபாசமாக பேசி தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை 4.45 மணியளவில், குடிபோதையில் இருந்த மாரிமுத்து, கஸ்தூரிபட்டியில் வசிக்கும் சண்முகம் (41) என்பவரது வீட்டுக்கதவை தட்டியுள்ளார். சத்தம் கேட்டு எழுந்து வந்த சண்முகத்தின் மனைவி கவிதா(34)விடம், சில்மிஷத்தில் ஈடுபட்டு அபாசமாக பேசியுள்ளார்.
அதிர்ச்சியடைந்த கவிதா, கூச்சலிடவே, சண்முகம், அவரது தம்பி பூபதி, உறவினர்கள் குமார், ராஜமாணிக்கம் ஆகியோர் மாரிமுத்துவை சரமாரியாக அடித்து உதைத்தனர். மொபட்டை எடுத்துக் கொண்டு தப்பியோட முயன்றவரை பின்தொடர்ந்து விரட்டிச் சென்று 5 பேரும், ஆத்திரம் தீரும் வரை சுற்றி வளைத்து தாக்கினர். இதில் மாரிமுத்து மயங்கி சாய்ந்தார். அதன்பிறகு அனைவரும் கலைந்து சென்றனர். அப்பகுதியினர் மாரிமுத்துவை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து இறந்தார். இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிந்து சண்முகம், பூபதி(33), கவிதா(34), குமார்(35), ராஜமாணிக்கம்(45) ஆகிய 5 பேரை கைது செய்தனர்.