Thursday, May 9, 2024
Home » குழந்தைகள் மருந்தில் கலப்படம் செய்யும் நபர்களை தெருவில் இழுத்து சென்று சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்

குழந்தைகள் மருந்தில் கலப்படம் செய்யும் நபர்களை தெருவில் இழுத்து சென்று சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் ஆவேசம்

by Karthik Yash

சென்னை: பச்சை குழந்தைகளுக்கு அளிக்கும் மருந்தில் கலப்படம் செய்யும் நபர்களை தெருவில் இழுத்து சென்று சாகும்வரை சிறையில் அடைக்க வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். சென்னை வடபழனி ஆற்காடு சாலையில் 250 படுக்கை வசதிகளைக் கொண்ட புதிய காவேரி மருத்துவமனையை நேற்று நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்து பேசியதாவது: 25 வருடங்களாக எந்தவிதமான வணிக நிறுவனங்கள் திறப்பு விழாவிலும் நான் கலந்து கொள்வதில்லை, அதற்கு காரணம் திறந்து வைத்தால் அந்த கட்டிடத்தில் ரஜினிகாந்தும் பார்ட்னர், அது அவருடைய கட்டிடம் என்று எல்லாம் பேசுவார்கள், ஆகையால் நான் கலந்து கொள்வதில்லை. இந்த இடத்தில் சம்சாரம் அது மின்சாரம் படத்திற்காக செட் போடாமல் வீடே கட்டினார்கள், அது சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அந்த ராசியான இடத்தில் மருத்துவமனையை கட்டியுள்ளதால் வெற்றி பெறும்.

எனக்கு உடல் நல குறைவு ஏற்பட்டு ஆழ்வார்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறினார்கள். அந்த அறுவைசிகிச்சை 99 சதவீதம் வெற்றி அடையும் , ஆனால் 1 சதவீதம் மட்டும் சந்தேகம் என்று கூறியதால், எனக்கு ஒரு சதவீதம் மட்டுமே என்ற வார்த்தை தலையில் ஓடிக்கொண்டே இருந்தது இருப்பினும் என்னை முழுவதுமாக சரி செய்தார்கள். யாருக்கு ஒழுக்கம் இல்லையோ அவர்கள் வாழ்க்கையில் முன்னேற முடியாது. ஒழுக்கம், நேர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு ஆகிய நான்கும் இருந்தால்தான் வெற்றி பெற முடியும்.

இது அனைத்தும் இந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் உள்ளது. இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக சென்னை உள்ளது தமிழருக்கு பெருமை. முதலில் காவேரி மருத்துவமனை எங்கே உள்ளது என்று கேட்டால் கமல்ஹாசன் வீட்டிற்கு பக்கத்தில் என்றனர், ஆனால் இன்று காவேரி மருத்துவமனை அருகே தான் கமல்ஹாசன் வீடு உள்ளது என்று சொல்கின்றனர். சும்மா உதாரணத்திற்கு தான் சொல்கிறேன். இது தேர்தல் நேரம் என்பதால் மூச்சு விடவே பயமாக உள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் யாருக்குவேண்டுமானாலும் எந்த நோயும் வரலாம். அனைத்திலும் கலப்படம் இருக்கிறது.

பச்சை குழந்தைகளுக்கு அளிக்கும் மருந்தில் கூட தற்போது கலப்படம் உள்ளது. அவ்வாறு செய்யும் நபர்களை தெருவில் இழுத்து சென்று அவர்களை சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும். வசதி இல்லாதவர்களும் மருத்துவம் செய்து கொள்ளும் விதமாக நன்கொடை வழங்குவதன் மூலம் அவர்களும் பயன் அடைவார்கள், உங்களுக்கும் புண்ணியம் வந்து சேரும் என்றார். விழாவில் காவேரி மருத்துவமனை குழுமத்தின் நிறுவனர் மற்றும் செயலாக்க தலைவர் டாக்டர் எஸ்.சந்திரக்குமார், நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் எஸ்.மணிவண்ணன் செல்வராஜ், இணை நிறுவனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

9 − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi