சென்னை: குழந்தை கடத்தல் தொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோ 2 ஆண்டுகளுக்கு முன்பு எகிப்தில் இருந்து பரப்பப்பட்டது என்றுசென்னை மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. சமூக வலைத்தளங்களில் கடந்த 3 நாட்களாக குழந்தை கடத்தல் தொடர்பாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் பர்தா அணிந்து வந்த ஒரு நபர், சாலையின் ஓரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு சிறுவனிடம் பேசுவது போலவும், மயக்க மருந்து கொடுத்து பின் வாகனத்தில் கடத்தி செல்வது போலவும் காட்சிகள் இருந்தது.
இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சென்னை மாநகர காவல்துறை கவனத்திற்கு வந்தது. அதன்படி மாநகர காவல்துறை சைபர் க்ரைம் போலீசார் இணையத்தில் வைரலாக பரவும் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த வீடியோ கடந்த 2022ல் சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது என்றும், எகிப்து நாட்டில் உள்ள சில இளைஞர்களால் காட்சிப்படுத்தப்பட்ட வீடியோ என்றும் விசாரணையில் தெரியவந்தது.
எனவே, பொதுமக்கள் இணையத்தில் பரவும் போலி வீடியோவை நம்ப வேண்டாம் என்று சென்னை மாநகர காவல்துறை சார்பில் வேண்டுகொள் விடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற போலி வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.