தஞ்சை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தஞ்சையில் நேற்று அளித்த பேட்டி:
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி உண்மைகளுக்கு மாறான பல செய்திகளை வெளியிட்டுள்ளார். சட்ட வரம்புகளுக்கு உட்பட்டுத்தான் கவர்னர் செயல்பட முடியும். ஆனால் அவர் வரம்புகளை மீறி, அரசியல்வாதியை போன்று, ஆர்.எஸ்.எஸ். அடிமட்ட தொண்டனை போல பேசுவது கண்டனத்துக்குரியது. சிதம்பரம் தீட்சிதர்கள் காலங்காலமாக குழந்தை திருமணங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான புகார்கள் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிந்து, தொடர்புடையவர்களை கைது செய்துள்ளனர். ஆனால் இந்த குழந்தை திருமணங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கவர்னர் பேசியிருக்கிறார்.
அரசின் மீது பிரச்னை இருந்தால் அமைச்சர்களிடம் அல்லது முதல்வரிடம் நேரடியாகவோ, கடிதம் மூலமாகவோ தெரிவிக்கலாம். பொது இடத்தில் பேட்டி அளிக்க கூடாது. இதேபோல கவர்னர் திரும்பத் திரும்ப வரம்புமீறி செயல்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. இதுதொடர்பாக விரைவில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கூட்டணி கட்சித்தலைவர்களுடன் ஆலோசித்து கவர்னரை தமிழகத்திலிருந்து வெளியேற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.