சென்னை: காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. வரும் கல்வியாண்டு முதல் தமிழ்நாட்டில் 30 ஆயிரத்து 122 அரசு தொடக்கப்பள்ளிகளில் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை 18 லட்சம் மாணவர்கள் பயனடையும் வகையில் காலை சிற்றுண்டி திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், காலை சிற்றுண்டி திட்டத்தை விரிவாக்கம் செய்வது குறித்து சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச்செயலாளர் இறையன்பு, பள்ளிக்கல்விதுறை அதிகாரிகள், சமூக நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கத்திற்கு ரூ. 500 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் இதன் மூலம் 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் எனவும் அரசு அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளுக்கும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று 2023-2024ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.