சென்னை: தர்மபுரி மாவட்டம், செல்லியம்பட்டி – மணிப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் காளி (எ) காளியப்பன் (27), நாம் தமிழர் கட்சியில் பணியாற்றி வருகிறார். இவர் தனது எக்ஸ் தளத்தில் திமுக சார்ந்த பிரமுகர்கள் மீது தொடர்ந்து அவதூறு கருத்துகளை பதிவு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தில் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. ஆனால் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு என கார்ட்டூன் பதிவேற்றம் செய்து முதல்வர் குறித்து அவதூறு செய்யும் வகையில் பதிவு செய்து இருந்தார்.
இதுகுறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், எக்ஸ் தளத்தில் முதல்வர் குறித்து அவதூறு பதிவு செய்த நபர் தர்மபுரி மாவட்டம் செல்லியம்பாட்டி – மணிப்பூர் கிராமத்தை சேர்ந்த நாம் தமிழர் கட்சி பிரமுகர் காளி என தெரியவந்தது. அதைதொடர்ந்து, சைபர் க்ரைம் போலீசார் தர்மபுரிக்கு சென்று முதல்வர் குறித்து அவதூறு பதிவு செய்த காளியை நேற்று முன்தினம் இரவு அதிரடியாக கைது செய்தனர். எக்ஸ் தளத்தில் இருந்து அவதூறு பதிவுகளையும் போலீசார் நீக்கினர்.