ராய்ப்பூர்: சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேலின் அரசியல் ஆலோசகராக உள்ள வினோத் வர்மா, முதல்வரின் சிறப்பு அதிகாரி மனிஷ் பன்சோரே ஆகியோரின் வீடுகளில் அமலாக்க துறை கடந்த வாரம் சோதனை நடத்தியது. அதை தொடர்ந்து சட்ட விரோத பண மோசடி சட்டத்தின் கீழ் இருவரின் வாக்குமூலங்களையும் அதிகாரிகள் பதிவு செய்தனர்.
இதற்கிடையே, மகாதேவ் ஆன்லைன் புக் என்ற பெயரிலான சூதாட்ட செயலி மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக உதவி சப் இன்ஸ்பெக்டர் சந்திரபூஷன் வர்மா உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த நபர்கள் துபாயில் இருந்து ஹாவாலா மூலம் பணம் பெற்றுள்ளதாக அமலாக்க துறை குற்றம் சாட்டியது. இந்நிலையில், சட்ட விரோத சூதாட்ட செயலி மோசடி குறித்து வினோத் வர்மா, மனிஷ் பன்சோரே ஆகியோரிடம் அமலாக்கத்துறை நேற்று விசாரணை நடத்தியது.