சுக்மா: பாதுகாப்பு படை மீது தாக்குதல் நடத்தி 38க்கும் மேற்பட்ட வீரர்களின் சாவுக்கு காரணமான நக்சலைட் தம்பதியினர் நேற்று போலீசில் சரணடைந்தனர். சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான சுக்மாவில் பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் பல முறை தாக்குதல் நடத்தியுள்ளனர். கடந்த 2020ம் ஆண்டு மின்பாவில் பாதுகாப்பு படையினர் மீது நக்சலைட்டுகள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தியதில் 17 வீரர்கள் பலியாயினர். 2021ம் ஆண்டில் தக்கல் குடாவில் நடந்த தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த இரண்டு தாக்குதல்களிலும் முக்கிய மூளையாக செயல்பட்டவர்கள் நந்தா என்ற நக்சலைட்டும் அவரது மனைவி சோமே. இவர்களுக்கு மேலும் சில தாக்குதல்களிலும் தொடர்பு உள்ளது. இவர்களை பற்றி தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வெகுமதி அளிக்கப்படும் என போலீசார் அறிவித்திருந்தனர். இந்நிலையில், நந்தா, சோமே ஆகியோர் நேற்று போலீசில் சரணடைந்தனர்.