மார்த்தாண்டம்: குழித்துறை அருகே நள்ளிரவில் சத்ரபதி சிவாஜி சிலையை மர்ம கும்பல் சேதப்படுத்தியது. குமரி மாவட்டம், குழித்துறை அருகே மேல்புறத்தை அடுத்த வட்டவிளையில் தோட்டத்துமடம் நவநீதகிருஷ்ணன் கோயில் குளம் அருகே சத்ரபதி சிவாஜியின் 9 அடி உயர உருவ சிலை உள்ளது. சத்ரபதி சிவாஜி பிறந்த தினம், சுதந்திர தினம், குடியரசு தினம், மற்றும் ராம நவமி, விஜயதசமி ஆகிய தினங்களில் இந்து அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் மர்ம கும்பல் சத்ரபதி சிவாஜி சிலையின் தலை பாகத்தை அடித்து உடைத்துள்ளது . நேற்று அதிகாலை இதுபற்றிய தகவல் காட்டுத்தீ போல் பரவியது. இதையடுத்து கோயில் நிர்வாகிகள் மற்றும் இந்து அமைப்பினர் என ஏராளமானோர் திரண்டதால் பதற்றம் ஏற்பட்டது. தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சேதமடைந்த சத்ரபதி சிவாஜி சிலையின் தலைப்பகுதியை போலீசார் துணியால் மூடினர். கோயில் தலைவர் நடராஜன் புகாரின்படி மார்த்தாண்டம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.