செய்யாறு: செய்யாறு மேல்மா சிப்காட் திட்டத்திற்கு 240 ஏக்கர் நிலங்களை அரசுக்கு அளிக்க கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் சம்மதம் தெரிவித்து கூட்டாக பேட்டி அளித்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்ட கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மாமண்டூர் த.ராஜி, செயலாளர் ஜே.கே.சீனிவாசன் உள்ளிட்டோர் அளித்த பேட்டி: செய்யாறு வட்டம், கிரஷர் மற்றும் குவாரி உரிமையாளர் சங்கம் சார்பாக மேல்மா, தேத்துறை, நர்மாபள்ளம், அத்தி, இளநீர்குன்றம், நெடுங்கல், வடஆளபிறந்தான், குரும்பூர் ஆகிய கிராமங்களில் உள்ளடங்கிய நிலங்களை செய்யாறு சிப்காட் பகுதி 3க்கு நிலம் எடுப்பு பணி நடைபெற்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் எங்கள் சங்க உறுப்பினர்கள் மேலே குறிப்பிட்டுள்ள கிராமங்களில் கல்குவாரிக்கு உகந்த சுமார் 240 ஏக்கர் பட்டா நிலங்களை கிரயம் பெற்று அரசு விதிகளுக்கு உட்பட்டு அரசு அனுமதியுடன் தொழில் செய்து வருகிறோம்.
கடந்த சில மாதங்களாக நடக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு கிரஷர் மற்றும் கல்குவாரி உரிமையாளர்கள் நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்த விதமான ஆதரவும் அளிக்கவில்லை. மக்களின் முன்னேற்றத்திற்காக இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காக அரசு சிப்காட் திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்திடும் நிலையில் நாங்கள் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு கல்குவாரி அமைப்பதற்காக அத்தி, வட ஆளபிறந்தான், நர்மாபள்ளம், குரும்பூர் தேத்துறை, இளநீர்குன்றம் உள்ளிட்ட கிராமங்களில் வாங்கி வைத்திருந்த சுமார் 240 ஏக்கர் நிலத்தையும் நாங்கள் கிரயம் பெற்று உள்ளோம். இதனை நாங்கள் வாங்கிய விலையை அரசு தருமானால் மொத்த நிலத்தையும் அரசுக்கு தர சம்மதம் தெரிவிக்கிறோம். இவ்வாறு தெரிவித்தனர்.