சேத்துப்பட்டு : சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நேற்று போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
சேத்துப்பட்டு அடுத்த தேவிகாபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில் போளூர் துணை கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசியதாவது:
தமிழகத்தில் இளைஞர்களின் வாழ்வாதாரம் மிகவும் மோசமான முறையில் போதை பொருட்களுக்கு அடிமையாகி வருகிறது. இதனை தடுக்க அரசு கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. அதில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கோயில்கள் அருகில் குட்கா மற்றும் போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது தடை விதித்துள்ளது. மேலும் கிராமங்கள் தோறும் சமூக ஆர்வலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு துறை அதிகாரிகளை கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
மாணவர்களாகிய நீங்கள் எண்ணம் முழுவதும் படிப்பில் வைத்து கல்வி பயில வேண்டும். யார் ஒருவன் நல்ல ஒழுக்கத்தையும், கல்வி கற்று திகழ்கிறானோ அவன் சமுதாயத்தில் உயர்நிலையை அடைவான். உங்கள் ஊரில் பெட்டிக்கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்தால் எங்களுக்கு தகவல் தெரிவியுங்கள்.
மேலும், உங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் போதை பொருட்களை பயன்படுத்தினால் அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இவ்வாறு அவர் பேசினார். இதில் சேத்துப்பட்டு காவல் உதவி ஆய்வாளர்கள் ஆனந்தன், முருகன். பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.