சென்னை: சென்னை போக்குவரத்து காவல்துறையில் ‘‘வீரா’’ மீட்பு வாகனத்தின் பயன்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை விபத்தில் சிக்கியவர்களை விபத்துக்குள்ளான வாகனங்களில் இருந்து மீட்டெடுக்கும் பணிக்கான ‘‘வீரா’’ என்று அழைக்கக்கூடிய அவசரகால மீட்பு மற்றும் விபத்துகளிலிருந்து மீட்கும் வாகனத்தின் பயன்பாட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, காவல்துறையினரின் செயல்முறை விளக்கத்தையும் பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில், தலைமைச்செயலாளர் சிவ் தாஸ் மீனா, உள்துறை செயலாளர் அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர், காவல்துறை மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை போக்குவரத்து காவல்துறை சாலை விபத்துகளை குறைப்பதிலும், சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் உயிரை காப்பதிலும் முன்னோடியாக விளங்கி வருகிறது. நமது சாலைகளில் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் திட்டத்தின் ஒரு அங்கமாக, சாலை விபத்துகளில் சேதமடைந்த வாகனங்களில் சிக்கிக் கொள்பவர்களின் உயிரைக் காப்பதற்கு, ஒரு தனித்துவமான மற்றும் முன்னோடியான முயற்சியாக மீட்பு வாகனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி இந்தியாவிலேயே முதல்முறையாக திட்டமிடப்பட்டு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டு அவை பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.