ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள அனுமந்தன்பட்டி கிராமத்தை சேர்ந்த வின்சென்ட் – வேளாங்கண்ணி தம்பதியரின் இரண்டாவது மகன் அன்பு ராஜன் (23). சென்னையில் உள்ள சாப்ட்வேர் கம்பெனியில் இன்ஜினியராக வேலை செய்து வந்தார். ஒரு மாதமாக, அன்புராஜன் அனுமந்தன்பட்டியில் உள்ள தனது வீட்டில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு, அனுமந்தன்பட்டியில் அன்புராஜன் சென்ற டூவீலர் மீது எதிரே வந்த சரக்கு வேன் மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்தார். தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மூளைச் சாவு அடைந்தார். இதையடுத்து அன்புராஜனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்குவதாக அவரது பெற்றோர் மருத்துவர்களிடம் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவரது உடலில் இருந்து பல்வேறு உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டு, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு பொருத்த ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அன்புராஜி யின் உடலுக்கு அரசு சார்பில் தேனி கலெக்டர் மரியாதை செலுத்தினார்.