சென்னை: சென்னை தின கொண்டாட்டத்தை முன்னிட்டு புகைப்படக் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 22ம் தேதி சென்னை தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக 1969ம் ஆண்டு சென்னை மாநகரம் முறைப்படி தீர்மானிக்கப்பட்ட நாளாக கருதி அன்றைய தினத்தில் இருந்து சென்னை தினம் பிறந்தநாளாக கருதி ஒவ்வொரு ஆண்டும் சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் 384ம் ஆண்டு சென்னை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை தினத்தை ஒட்டி “அக்கம் பக்கம்” புகைப்பட கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். சென்னை பள்ளி மாணவர்களின் அக்கம் பக்கம் புகைப்பட கண்காட்சி மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நடைபெறுகிறது. சென்னையின் முக்கிய நிகழ்வுகள், இடங்கள் அடங்கிய ஆவணப் புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் தங்கள் அக்கம் பக்கம் நடந்த நிகழ்ச்சிகளை ஒரு தொகுப்புகளாக விளக்கும் புகைப்படங்களை எடுத்து அதனை கண்காட்சியில் காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்து குழுமம் சார்பில் சென்னையின் முக்கிய நிகழ்வுகள் அடங்கிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து முதலமைச்சர் பார்வையிட்டார். ஒட்டுமொத்தமாக 63 புகைப்படங்கள் இதில் இடம் பெற்றுள்ளது. இந்து குழுமத்தின் சார்பில் எபிக் சாகா ஆப் தி சோழாஸ் உள்ளிட்ட 3 புத்தகங்களை முதலமைச்சர் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியம், தங்கம் தென்னரசு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர், ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.