சென்னை: சென்னையில் நாளை மற்றும் நாளை மறுநாள் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சந்தை நடைபெறுகிறது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், ஊரகம் மற்றும் நகர்ப்புற பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நகர பகுதியில் விற்பனை செய்ய ஏதுவாக பல்வேறு புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஒவ்வொரு மாதமும் மாத முதல் வார சனி, ஞாயிறு மற்றும் மாதத்தின் மூன்றாம் வார சனி ஞாயிறு கிழமைகளில் நுங்கம்பாக்கம் அன்னை தெரசா மகளிர் வளாகத்தில் இயற்கை சந்தை நடத்திடப்படவுள்ளது.
இம்மாத இயற்கை சந்தை நாளை (சனிக்கிழமை) மற்றும் பிப்.4 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ளது. இந்த இயற்கை சந்தையில் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் மகளிர் சுய உதவிக்குழுக்களால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை சார்ந்த பொருட்களான பாரம்பரிய அரிசிகள், சிறுதானிய மற்றும் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள், காய்கறிகள் மற்றும் கீரைகள், பனை ஒலை பொருட்கள் போன்ற இயற்கையுடன் சார்ந்த பொருட்கள் கிடைக்கும். மேலும் இயற்கை சந்தையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களால் தயார் செய்யப்படும் பல்சுவை உணவு பொருட்கள் கிடைக்கும். எனவே பொதுமக்கள் அனைவரும் இயற்கை சந்தையை பார்வையிட்டு மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருட்களை வாங்கி மகிழ அன்புடன் அழைக்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.