சென்னை: சென்னை யானைக்கவுனியில் ஆட்டோவில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.2.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆட்டோ ஓட்டுனரின் சமயோசித புத்தியால் ஹவாலா பணம் கடத்தியவர்கள் சிக்கினர். ஹவாலா பணம் கடத்திய ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டார். பேருந்தில் இருந்து பணத்தோடு இறங்கிய 3 பேர், நடத்துனரிடம் 3,000 ரூபாயை கொடுத்ததால் ஆட்டோ ஓட்டுனருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆட்டோவில் பயணித்தவர்கள் சந்தேகத்துக்கு இடமாக செயல்பட்டதால் காவல் நிலையத்துக்கு ஓட்டுனர் சுந்தர்ராஜன் அழைத்துச் சென்றுவிட்டார். யானைக்கவுனி காவல் நிலையத்தில் ஆட்டோவை நிறுத்தி தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த 3 பேரும் காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற போது விரட்டிச் சென்று போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தெலுங்கானா தேர்தலுக்காக கொண்டு செல்லப்பட்ட பணமா? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பணம் பறிமுதல் தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சரியான நேரத்தில் தகவல் அளித்த ஆட்டோ ஓட்டுனர் சுந்தர்ராஜுக்கு காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.