சென்னை: சென்னை ஆர்.ஏ.புரத்தில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 3 பேரிடம் இருந்து ரூ.1.81 கோடி ரொக்க பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் 19ம் தேதி நடக்கிறது. இதனால் மாநிலம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர். அந்த வகையில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜா அண்ணாமலைபுரத்தில் 3வது குறுக்கு தெரு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது, அதில் உரிய ஆவணங்கள் இன்றி கட்டுக்கட்டாக ஒரு கோடியே 81 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் இருந்தது தெரியவந்தது. பணத்திற்கான ஆவணங்களை காரில் வந்த கிருஷ்ணமூர்த்தி, சிவகுமார், ஷேர் கலாம் ஆகியோரிடம் தேர்தல் பறக்கும் படையினர் கேட்டனர். ஆனால் அவர்களிடம் ஆவணங்கள் இல்லாததால் பணம் முழுவதையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து பணத்திற்கான வரவு குறித்து 3 பேரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.