சென்னை : சென்னையில் 27 ஆண்டுகளுக்கு பின் மழையால் ஜூன் மாதத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், “2k மாணவர்கள் அதிர்ஷ்டசாலிகள்தான்.. ஜூன் மாதத்தில் முதலில் கடுமையான வெப்பம் காரணமாக விடுமுறை.. இப்போது கனமழை காரணமாக விடுமுறை.. சென்னையில் ஜூன் மாத சராசரி அளவான 55 மிமீ மழையைவிட 3 மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது. 27 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் மாதம் சென்னையில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.1996ம் ஆண்டு வரலாறு காணாத மழை பெய்தது. குறிப்பாக அடையாறு உள்ளிட்ட தென்சென்னை பகுதிகளில் 150 மி.மீ வரை மழை கொட்டித் தீர்த்தது.
அந்த சமயத்தில் ஒரு வாரத்திற்கு பள்ளிகள் விடுமுறை விடப்பட்டது கவனிக்கத்தக்கது. 1991, 1996 ஆகிய ஆண்டுகளை தொடர்ந்து தற்போது 2023ல் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளது.பல்வேறு இடங்களில் 100 மி.மீ அளவை தாண்டி மழை பெய்துள்ளது. இதற்கு மேகங்கள் கடற்பகுதியில் இருந்து நகர்வதே முக்கிய காரணம். முன்னதாக வரலாறு காணாத அளவிற்கு வெப்ப அலைகள் தாக்கி வந்தன. அதை சமன் செய்யும் வகையில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. தென் சென்னை பகுதிகளில் ஒரே இரவில் இயல்பை விட 3 மடங்கு அளவில் மழை கொட்டித் தீர்த்துள்ளது. இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்கு சென்னையில் மழை தொடரும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.