சென்னை: சென்னை மாநகர காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக, மத்திய குற்றப்பிரிவில் புலன் விசாரணையின் போது கைப்பற்றப்படும் வழக்களின் சொத்துகள் வேப்பேரியில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. வழக்கில் பறிமுதல் செய்யும் சொத்துகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்கும் வரையிலான இடைப்பட்ட காலத்திலும், நீதிமன்றத்தில் ஒப்படைத்த பின் மீண்டும் புலன் விசாரணை அதிகாரியின் பாதுகாப்பில் ஒப்படைக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகிறது. இந்த வழக்கு சொத்துகள் பாதுகாப்பாகவும், அதன் சாட்சிய மதிப்பு மாறாமலிக்கும் வகையில் அந்த சொத்துகள் நீதிமன்ற தீர்ப்பின் மூலம் முடித்து வைக்கும் வரையில் ஆணையர் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு பெட்டக அறையில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அதன்படி மத்திய குற்றப்பிரிவின் பாதுகாப்பு பெட்டக அறையில் தற்போது 403 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 44 வகையான விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் ஆவணங்கள் உள்பட 2,925 சொத்துகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. வழக்குகளின் சொத்துகளை அடிக்கடி நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று திரும்ப கொண்டு வந்து ஒப்படைக்கப்படுவது போன்ற பல காரணங்களாலும், இதை முறையாக பராமரிக்க மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு சவாலாகவே உள்ளது. எனவே, இதுபோன்ற சிரமங்களை போக்கும் வகையில், போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவுப்படி ‘க்யூஆர்’ குறியீடு வடிவத்துடன் பாதுகாப்பு பெட்டக அறையின் ஆவணங்களை பராமரிக்க மென்பொருள் ஒன்று உருவாக்கப்பட்டு மத்திய குற்றப்பிரிவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மென்பொருளால், ஒவ்வொரு வழக்கு சொத்துகளை அடையாளம் காணும் வகையில் தனிப்பட்ட க்யூஆர் குறியீடு வழங்கப்பட்டு அதனை உரிய பாதுகாப்புடன் எளிதில் கையாள முடியும். வழக்கு சொத்து புலன் விசாரணை அதிகாரி, பாதுகாப்பு பெட்டகம் மற்றும் நீதிமன்ற ஆகியோரில் யாருடைய பொறுப்பில் உள்ளது என்று கண்காணிக்க முடியும். அதோடு மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட வழக்கின் சொத்தினை அதை பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்து வெளியே எடுத்து அதன் சீலை அகற்றி பார்க்காமல் அதன் வடிவத்தினையும், வகையையும் படத்தின் மூலம் காண முடியும். வழக்கு சொத்து நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று வருவது போன்றவற்றை இந்த மென்பொருள் மூலம் முறையாகவும் மற்றும் எளிமையாகவும் கண்காணிக்க முடியும். காவல்துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போது சென்னை மாநகர காவல்துறையில் மத்திய குற்றப்பிரிவில் இந்த புதிய மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.