சென்னை: சென்னையில் மீண்டும் டபுள் டெக்கர் பேருந்து இயக்கப்பட உள்ள நிலையில், மெரினா கடற்கரை சாலையில் நேற்று இந்த பேருந்தின் சோதனை ஓட்டம் நடைபெற்றது. சென்னையில் டபுள் டெக்கர் என சொல்லக்கூடிய ஒன்றுக்கு மேல் மற்றொரு தளம் கொண்ட மாநகர பேருந்துகள் சேவை கடந்த 1997ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், தாம்பரத்தில் இருந்து பிராட்வே வரை தடம் எண் 18ஏ என்ற பேருந்து இயக்கப்பட்டது. குறைந்த செலவில் அதிக பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் என்பதால் போக்குவரத்து துறைக்கு அதிக லாபம் கொடுக்கும் வகையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை அமைந்தன.
இந்த பேருந்துகளில் பயணிப்பது என்பது ஒரு வித்தியாசமான அனுபவத்தை தரும். குறிப்பாக சென்னை போன்ற நகரங்களில் உயரமான கட்டிடங்கள் உள்ள பகுதிகளில் இந்த பேருந்துகள் செல்லும்போது அதன் அழகை வித்தியாசமான கோணத்தில் இருந்து ரசிக்க முடியும். பல திரைப்படங்களில் இந்த டபுள் டெக்கர் பேருந்துகள் இடம்பெற்றிருக்கும். அந்த காலகட்டத்தில் சென்னை அண்ணாசாலையில் முக்கியமான பகுதியை இந்த பேருந்து கடந்து சென்றதால் இதில் பயணிக்க சுற்றுலா பயணிகளே ஆர்வம் காட்டினார். அதே நேரத்தில் இந்த பேருந்துகளில் அதிகமான எண்ணிக்கையில் பயணிகள் பயணிக்க முடியும். இந்நிலையில், பல்வேறு நிர்வாக காரணங்களுக்காக, கடந்த 2008ம் ஆண்டு இந்த பேருந்துகளின் சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது தமிழக அரசு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க, மீண்டும் இந்த டபுள் டெக்கர் பேருந்துகளை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்துள்ளது.
சுற்றுலாத்தலங்களுக்கு இடையே இந்த வகை பேருந்து சேவையை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறி இருந்தார். இதனையடுத்து, எந்த வழித்தடத்தில் டபுள் டெக்கர் பேருந்து சேவையை கொண்டு வரலாம் என்பது குறித்து ஆராயும் பணியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், சென்னை மெரினா சாலையில் டபுள் டெக்கர் பேருந்தை இயக்குவதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது. சாலையில் டபுள் டெக்கர் பேருந்துகளை கண்ட சென்னைவாசிகள் உற்சாகமடைந்தனர். சென்னையில் டபுள் டெக்கர் பேருந்து சேவை நிறுத்தப்பட்டு கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. தற்போது, ரீ என்ட்ரி கொடுக்க இருப்பது சென்னைவாசிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.