சென்னை: சென்னை சேத்துப்பட்டு பகுதியில் கஞ்சா போதையில் வாகனங்களை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை சேத்துப்பட்டு பகுதியில் நேற்றிரவு பிருந்தாவன நகர் 2, 3 மற்றும் 4வது தெருக்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை 2 மர்ம நபர்கள் கத்தியால் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. ரவுடிகளின் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனம், 6 ஆட்டோ, 3 கார்கள் சேதமடைந்தன. இதுகுறித்து அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், போதையில் வாகனங்களை சேதப்படுத்திய 2 பேரை சுற்றிவளைத்து கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
விசாரணையில் அவர்கள் இருவரும் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த குகன், தனுஷ்ராஜா என்பது தெரியவந்தது. இருவரும் கஞ்சா மற்றும் மதுபோதையில் மக்களை பயமுறுத்துவதற்காக இத்தகைய செயலில் ஈடுபட்டதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவர் மீதும் சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்துள்ளது. இதனிடையே, வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தும் அதிர்ச்சியூட்டும் காட்சி வெளியாகியுள்ளது. வாகனங்களை கத்தியால் தாக்குவது, சாலையில் நெருப்புப் பொறி பறக்க கத்தியை தேய்ப்பது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.