சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த மழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. ஆந்திரா அருகே மிக்ஜாம் புயல் கரையை கடந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் மழை குறைந்தது. இதன் காரணமாக சென்னையில் ஒரு சில இடங்களில் வெள்ளநீர் வடிய தொடங்கியது. எனினும் பல்வேறு இடங்களில் வெள்ள நீர் தேங்கியிருந்ததாலும், மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்து கிடப்பதால் அதனை சீரமைக்கும் பணிகளை மாநகராட்சி செய்து வருகிறது.
இந்நிலையில், வெள்ள பாதிப்புகளால் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் வீடுகளில் முடங்கினர். நேற்று முன்தினம் அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு மழைநீர் தேங்கி கிடந்தது. பாதுகாப்பு கருதி மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் தண்ணீர் இல்லாமல் மக்கள் தவித்தனர். மேலும், வாட்டர் கேன் கிடைக்காமல் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். நேற்று காலை மழை விட்டதை தொடர்ந்து பலர் உணவு தயாரிப்பதற்கான அத்தியாவசிய பொருட்களை வாங்க வீடுகளில் இருந்து வெளியேறினர். இதனால் கடைகளில் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக காய்கறி கடைகளில் அதிகமாக மக்கள் குவிந்தனர். இதனால் மளிகை கடைகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் காலியாகிவிட்டது.
கடைகளுக்கு பொருட்களை கொண்டு வரக்கூடிய வாகனங்கள் வருவதற்கு வழி இல்லாததால் பல கடைகளில் அனைத்து பொருட்களும் முடிந்து கடைகளை பூட்டி விட்டு சென்று விட்டனர். அந்த அளவுக்கு வியாபாரம் சூடுபிடித்தது. காய்கறி கடைகளை பொருத்தவரை மக்களின் தேவைகளை சாதகமாக்கிக் கொண்ட காய்கறி வியாபாரிகள் சிலர் ஏற்கனவே குறைந்த விலைக்கு விற்ற தக்காளி, வெங்காயம், கேரட் உள்ளிட்ட காய்கறிகளை விலையுயர்த்தி விற்பனை செய்தனர்.இதனால் பொதுமக்கள் மேலும் பாதிப்பிற்குள்ளாக்கினர். இருப்பினும் காய்கறிகளின் தேவை இருப்பதால் பொதுமக்கள் விலையேற்றத்தினை பொருட்படுத்தாமல் வாங்கி சென்றனர். அனைத்து கடைகளும் இன்னும் பாதுகாப்பு கருதி பெரும்பாலான உரிமையாளர்கள் திறக்கவில்லை. இதனால் திறந்திருந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது குறிப்பிடத்தக்கது.
கூகுள் பேக்கு உணவு கிடையாது: கடந்த இரண்டு நாட்களாக விடாது பெய்த கனமழையை தொடர்ந்து, நேற்று மழை விட்டு வெயில் அடிக்க தொடங்கியது. எனினும் பெரும்பாலான கடைகள் திறக்கப்படவில்லை. இதற்கு காரணம், ஆங்காங்கே மழைநீர் தேங்கி கிடந்ததால் வானக போக்குவரத்து பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. இதனால் ஓட்டல்களுக்கு தேவையான காய்கறிகள், மளிகை சாமான்கள் கிடைக்கவில்லை. ஒரு சில உணவங்களே திறந்திருந்தது. அங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. இந்த கடைகளில் நெட்ஒர்க் சரியாக வேலை செய்யாததால் கூகுள் பே மூலம் பணம் செலுத்த இயலாது என பெரிய அளவில் போர்டு வைத்தனர். இதனால் பலர் ஏடிஎம்களுக்கு சென்று எடுத்து விட்டு வந்தே சாப்பிட்டு சென்றனர். இதே நிலை தான் கடைகளிலும் காணப்பட்டது.
பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசை: மிக்ஜாம் புயல் எதிரொலியாக விடாமல் தொடர்ந்து கனமழை பெய்தது. அதுவும் நேற்று முன்தினம் வெளுத்து வாங்கியதால் எங்கு பார்த்தாலும் மழைநீர் தேங்கி கிடந்தது. இதனால் சென்னையில் அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டிருந்தது. கடந்த இரண்டு நாட்களாக பலர் வீடுகளில் முடங்கி கிடந்ததால் பலர் வாகனங்களை இயக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை முதல் லேசாக வெயில் அடிக்க தொடங்கியுள்ளது. மழை விட்டதால் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றனர். இதையடுத்து, தங்கள் வானங்களுக்கு பெட்ரோல், டீசல் அடிக்க மொத்தமாக சென்றதால் அனைத்து பெட்ரோல் பங்குகளில் கூட்டம் அலைமோதியது. இதனால் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வானங்களுக்கு பெட்ரோல் போட்டு சென்றனர்.