சேலம்: வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் பாஜ மாநில செயலாளரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாரமங்கலத்துபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் கவுதம் (31). இவர் பாரதிய ஜனதா கட்சியின் நெசவாளர் அணி மாநில செயலாளராக செயல்பட்டு வந்தார். இவர் கொரோனா கால கட்டத்தில், சென்னை மாநகராட்சியில் ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் வசூலித்துக்கொண்டு போலி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். இவருடன் சென்னையை சேர்ந்த மகேஷ்வரி, நீட் கோச்சிங் சென்டர் நடத்தி வரும் சூரமங்கலத்தை சேர்ந்த சின்னான் ஆகியோரும் உடந்தையாக இருந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட சுதா, விஜயகுமார் உள்ளிட்ட 4 பேர் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தனர். அதில் தங்களிடம் ரூ.40 லட்சம் வாங்கி மோசடி செய்ததாக தெரிவித்துள்ளனர். அதன்பேரில் கடந்த ஏப்ரல் மாதம் கவுதம், மகேஷ்வரி, சின்னான் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கவுதம் தலைமறைவான நிலையில் அவரை நேற்று போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மற்ற 2 பேரையும் தேடி வருகின்றனர்.