Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சென்னை, கோவை மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்: உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை தகவல்

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் தொடர்புடைய நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதில் முன்னாள் அமைச்சர் மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.

இதையடுத்து, வழக்கில் தொடர்புடைய எம்.எஸ். கன்ஸ்ட்ரக்சன் இன்ஃப்ரா லிமிடெட், ஆலம் கோல்டு, ஆலயம் பவுண்டேஷன், வைதூரியா ஓட்டல் மற்றும் கண்ஷ்ட்ரோ மால் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்யக் கோரி தனிதனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தன. அந்த மனுக்களில், எஸ்.பி. வேலுமணி மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் பொது ஊழியர் அவருக்கும், தங்களுக்கும் தொடர்பில்லை என்பதால் தங்கள் மீதான வழக்குகளையும் ரத்து செய்ய வேண்டுமென்று கோரியிருந்தனர்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நிறுவனங்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்து, நிறுவனங்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், 6 வாரங்களில் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நிறுவனங்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி அறப்போர் இயக்கம் உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குற்றப்பத்திரிகை பரிசீலனைக்கு பிறகு வழக்கு எண்ணிடப்படும் என்றார். இதையடுத்து நீதிபதி, குற்றப் பத்திரிகையை 2 வாரங்களில் பரிசீலித்து எண்ணிட வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்துவைத்தார்.