சென்னை: வரும் 7-தேதி நடைபெறுவதாக இருந்த அதிமுக செயற்குழு கூட்டம் தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு அதுவும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அதிமுகவின் செயற்குழு கூட்டமும் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. வருகின்ற 7-ம் தேதி மாலை அதிமுக-வின் செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இருந்து அதிகாரபூர்வமாக நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. இந்நிலையில், தற்போது அறிவிக்கப்பட்ட செயற்குழு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தரப்பிலிருந்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிசாமியை கட்சியின் பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியிடப்பட்டு இருந்தது. இதனால் ஓபிஎஸ் தரப்பிற்கு இது அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில், கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையை தொடங்குவதற்காக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. குறிப்பாக 5-ம் தேதி முதல் உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கப்படும். புதிய உறுப்பினர்கள் கட்சியில் சேருவதற்காக விண்ணப்பிக்கலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அதன்பின் வருகிற 7-ம் தேதி மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், நேற்று மாவட்ட செயலாளர் கூட்டம் ரத்து செய்யப்படுவதாகவும், அதற்கு பதிலாக கட்சியின் தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறும் எனவும், செயற்குழு உறுப்பினர்களாக இருக்கக்கூடிய மாவட்ட செயலாளர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நிர்வாகிகள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று அறிக்கையில் வெளியிடப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது செயல்குழு கூட்டமும் ரத்து செய்யப்படுவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. ஒரு சில காரணங்களால் கூட்டம் ரத்துசெய்யப்படுவதாக அதிமுக அறிவித்துள்ளது. அடுத்தடுத்து நிர்வாகிகள் கூட்டம் அறிவிக்கப்பட்டு ரத்து செய்யப்படுவதால் அதிமுக தொண்டர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.