சென்னை: சென்னை விஐடியில் 8ம் ஆண்டு வைப்ரன்ஸ் சர்வதேச கலை மற்றும் விளையாட்டு திருவிழா விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதன் தலைமையில், விஐடி வளாகத்தில் நடந்தது. இதில், இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக், வைப்ரன்ஸ் சர்வதேச கலை மற்றும் விளையாட்டு திருவிழாவை தொடங்கி வைத்து பேசுகையில், தனது கல்லூரி கலைநிகழ்ச்சியின் நினைவலைகளை பகிர்ந்ததோடு, கிரிக்கெட் அனுபவத்தையும் தோனி, ஜடேஜா போன்ற வீரர்களுடனான அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டார். பின்னர், மாணவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார்.
முன்னதாக, கடந்த 6ம்தேதி அதிகாலை “ஆண் – பெண் சமத்துவத்துவம்” (gender equality) குறித்து மினி மாரத்தான் நடந்தது. இதில், 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு, கோப்பைகளையும், சான்றிதழ்களையும் விஐடி துணை தலைவர் சேகர் விசுவநாதன் வழங்கினார். தொடர்ந்து, ஸ்டைல் – அதான் (style-athon), போலராய்ட் போட்டோ பூத் (Polaroid photobooth) உள்ளிட்ட கலை மற்றும் விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதையடுத்து, மாலை பிரபல பாடகர் ஷ்ரேயா கோஷலின் இசை நிகழ்ச்சி நடந்தது. அதில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். 2வது நாளான நேற்று பிரபல பின்னணி பாடகி ஆண்ட்ரியாவின் இசை நிகழ்ச்சி நடந்தது.
இன்று பின்னணி பாடகி ஜோனிதா காந்தி, ஷ்ரே கண்ணா நடன குழுவினரும், நிறைவு நாளான நாளை நடிகர் சோனு சூத், லாஸ்ட் ஸ்டோரிஸ் இசைக்குழுவினர் மற்றும் சர்வதேச வயலின் கலைஞர் தனிகா ஆகியோரின் இசை நிகழ்வுகள் நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில், விஐடி துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், சென்னை விஐடி கூடுதல் பதிவாளர் பி.கே.மனோகரன் கலந்துகொண்டனர்.