சென்னை: சென்னையில் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் இடத்தில் காவல்துறையினர் பாஜகவினர் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. பேனர்கள் வைக்க கூடாது என காவல்துறையினர் கூறியதால் கராத்தே தியாகராஜன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பிரதமர் மோடியின் ரோடு ஷோ நடைபெறும் இடத்தில் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி ஒரே கட்டமாக 39 தொகுதிகளுக்கும் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வரும் லோக்சபா தேர்தலையொட்டி 2 நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். முதல் நாளான இன்று பிரதமர் மோடி சென்னையில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு சென்னையில் வாகன பேரணி செல்கிறார். இதில் திரளான பாஜகவினர் பங்கேற்க உள்ளனர்.
இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். அதன்பிறகு சென்னை விமான நிலையத்தில் இருந்து காரில் பிரதமர் மோடி திநகர் பனகல் பார்க் செல்கிறார். அங்கிருந்து மாலை 6 மணிக்கு பிரதமர் மோடியின் ரோடு ஷோ நிகழ்ச்சி தொடங்குகிறது. பனகல் பார்க்கில் இருந்து தேனாம்பேட்டை சிக்னல் வழியாக பாண்டிபஜார் வரை சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவுக்கு பிரதமர் மோடி திறந்த வாகனத்தில் பேரணியாக சென்று பாஜகவுக்கு ஓட்டு சேகரிக்கிறார்.
இந்நிலையில் பிரதமர் வருகையையொட்டி சென்னையில் போக்குவரத்து மாற்றும் செய்துள்ளனர். அதேபோல பிரதமர் ரோடு ஷோ நடக்கும் இடத்தில் பேனர்கள் போஸ்டர்கள் வைக்க வைக்க கூடாது என்று போலீசார் கூறியதால் போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உரிய அனுமதி பெற்றும் பேனர்கள் வைக்க கூடாது என்று சொல்வது எப்படி நியாயம் என்று கூறி பாஜக கராத்தே தியாகராஜன் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.