கொழும்பு: சென்னையில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணத்துக்கு கடந்த 16 ம் தேதி முதல் தினசரி விமான சேவை அலையன்ஸ் ஏர் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது. ஏர்-இந்தியாவின் சகோதர நிறுவனமான அலையன்ஸ் ஏர் நிறுவனம் 2019-ம் ஆண்டு சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு நேரடி விமான சேவையை தொடங்கியது. ஆனால் கொரோனா தொற்றினால் இந்த விமான சேவை நிறுத்தப்பட்டது. பிறகு 2022 டிசம்பர் முதல், வாரத்தில் 4 நாட்கள் என மீண்டும் சேவை தொடங்கப்பட்டு விமான சேவை இயக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கடந்த வாரம் கொழும்புவில் நடந்த இந்திய டிராவல் ஏஜென்ட்ஸ் கூட்டமைப்பு மாநாட்டிற்கு வருகை தந்த ஒன்றிய விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா சென்னை-யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று தெரிவித்தார். இந்நிலையில், சென்னை-யாழ்ப்பாணம் தினசரி விமான சேவை நேற்று முன்தினம் முதல் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, தினமும் காலை 11.30 மணிக்கு யாழ்ப்பாணம் வந்து சேரும் அலையன்ஸ் ஏர் நிறுவனத்தின் ஏடிஆர்72 விமானம், மீண்டும் 12.30 மணிக்கு சென்னை புறப்படுகிறது.