சென்னை: எண்ணூரில் அமோனியா வாயுக் கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. சென்னை எண்ணூர் அருகே பெரிய குப்பம் பகுதியில் செயல்பட்டு வந்த தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலையில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் 26ம் தேதி இரவு நேரத்தில் திடீரென வாயுக்கசிவு ஏற்பட்டது. இந்த வாயுக்கசிவால் தொழிற்சாலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் வசித்து வந்த பொதுமக்கள் பலருக்கும் மூச்சுத்திணறல், வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டன.
இதனையடுத்து, வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 30க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, கோரமண்டல் உரத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து எண்ணூர் கோரமண்டல் ஆலையில் ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவு விவகாரம் தொடர்பாக தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து விசாரிக்க முடிவு செய்தது. மேலும், இது தொடர்பான விசாரணை புத்தாண்டை அடுத்து விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி வழக்கை விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் முடிவு செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், கோரமண்டல் நிறுவனத்தில் அமோனியா குளிரூட்டும் கருவி செயலிழந்ததன் காரணமாக தான் கசிவு ஏற்பட்டிருக்கிறது. அப்போது எண்ணூரில் அமோனியா வாயுக்கசிவிற்கு காரணமானோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிதி வழங்கப்படும். தொழில்துறை பாதுகாப்பை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும் என்று தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ‘துறைமுகத்தில் இருந்து நிறுவனத்திற்கு அமோனியா எடுத்துவரும் குழாயில் ஏற்பட்ட அழுத்தத்தால் தான் கசிவு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிறுவனம் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது’ என்று விளக்கம் அளித்துள்ளது.