சென்னை: திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10:30 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் ஹோட்டலில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் திமுக இளைஞரணி மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர் பணி குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதனை எதிர்கொள்ள தயாராக அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. தங்கள் கட்சியை பலப்படுத்துவதோடு கூட்டணியையும் உறுதி செய்து வருகின்றன.
திமுக சார்பில், அனைத்து தொகுதிகளிலும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ளது. மண்டல வாரியாக வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். திமுக இளைஞரணி மாநாடு டிசம்பர் 17-ம் தேதியன்று சேலத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இந்நிலையில், மாநாட்டை சிறப்பாக நடத்துவது குறித்து ஆலோசிக்க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை திமுக தலைமை கூட்டியுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு சென்னை தி.நகர், ஓட்டல் அக்கார்டில் நடைபெறுகிறது. இதில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி உத்தரவிடப் பட்டுள்ளது. இக்கூட்டத்தில் திமுக இளைஞரணி 2-வது மாநில மாநாடு, வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் (பிஎல்சி) பணிகள் குறித்து விவாதிக்கப்படும் என தெரிகிறது.