Saturday, May 18, 2024
Home » சென்னையில் இன்று மாலை ‘கலைஞர் 100’ பிரமாண்ட விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறுகிறது

சென்னையில் இன்று மாலை ‘கலைஞர் 100’ பிரமாண்ட விழா: முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார் தமிழ் திரையுலகம் சார்பில் நடைபெறுகிறது

by MuthuKumar

சென்னை: மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழ் திரையுலகினர் சார்பில் இன்று மாலை சென்னையில் பிரமாண்டமாக நடைபெறுகிறது. இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் 3ம் தேதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் 3 ஆம் தேதி வரை ஓராண்டு முழுவதும் திமுக சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க பொதுக்கூட்டத்தில் தமிழ் சினிமா வளர்ச்சியில் கலைஞர் செய்த மிகப்பெரிய பங்களிப்பை போற்றும் விதமாக ‘கலைஞர் 100’ கலை விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கான ஒப்புதலும் பெறப்பட்டு முதலில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த டிசம்பர் 24ம் தேதி பிரமாண்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் டிசம்பர் முதல் வாரத்தில் சென்னையை மிக்ஜாம் புயல் தாக்கியது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டதை கருத்தில் கொண்டு அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ‘கலைஞர் 100’ விழா ஜனவரி 6ம் தேதி நடக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மறுபக்கம் நிகழ்ச்சிக்கான அழைப்பிதழ் கொடுக்கும் பணியும் தீவிரமாக நடந்தது. கலைஞர் 100 விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நேரில் சென்று தயாரிப்பாளர் சங்க தலைவர் முரளி ராம நாராயணன், பொதுச்செயலாளர் பைவ் ஸ்டார் கதிரேசன், இயக்குநர் லிங்குசாமி, சிவா, பூச்சிமுருகன் உள்ளிட்டோர் அழைப்பிதழ் வழங்கினர்.

மேலும் இந்த விழாவில் திரையுலகம் சார்பில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார்கள் மோகன்லால், மம்மூட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்கள் பிரபாஸ், வெங்கடேஷ், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கும் நேரில் அழைப்பிதழ் வழங்கப்பட்டுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் கலைஞர் 100 விழா சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த விழா இரவு 10 மணி வரை நடைபெற உள்ளது. முதல்வர் வருகை தரவுள்ளதால் நிகழ்ச்சி நடக்கும் இடத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பிரமாண்ட விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோர் கூடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஒட்டுமொத்த தமிழ் திரையுலக கலைஞர்கள், பிரமுகர்கள் கலந்துகொள்கின்றனர்.

இதையொட்டி இன்று அனைத்து சினிமா படப்பிடிப்புகள், பிற திரைப்பட பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விழாவில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கலைஞரின் சாதனைகளை போற்றி சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறும். கலைஞர் கதை, வசனம் எழுதிய திரைப்படங்களிலிருந்து முக்கியமான காட்சிகள் திரையில் ஒளிபரப்பப்படும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மட்டுமின்றி, தென்னிந்திய நடிகர்கள் சங்கம், பெப்சி, இயக்குனர்கள் சங்கம் உள்பட அனைத்து திரையுலக சங்கங்களும் இணைந்து இந்த விழாவை பிரமாண்டமான முறையில் நடத்த உள்ளன.

You may also like

Leave a Comment

three + eighteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi