செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில், தீவன அபிவிருத்தி திட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்க்டர் ராகுல்நாத் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பாண்டில் தீவண அபிவிருத்தி திட்டம் 2023-24ன் கீழ் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் அறிவிக்கப்பட்டது. நீர்ப்பாசன வசதி கொண்ட தென்னை மற்றும் பழத்தோட்டத்தில் 0.5 ஏக்கர் முதல் ஒரு ஹெக்டர் பரப்பளவில் தீவன பயிர்களான தீவனச் சோளம், கம்பு, ஒட்டுப்புல் பயிர் வகைகள் பல்லாண்டு தீவனப்புல் வகைகளில் ஏதேனும் ஒன்றை ஊடுபயிராக பயிரிட்டு 3 வருட காலம் பராமரிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.3000 முதல் 1 ஹெக்டேருக்கு ரூ.7500 வரை மானியமாக வழங்கப்படவுள்ளது.
மேலும், தீவன விரயத்தை குறைக்க 15 எண்ணிக்கையிலான 2 பிறி திறன் கொண்ட புல் நறுக்கும் கருவிகள் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படவுள்ளது. இதில், பயன்பெற விருப்பம் உள்ள விவசாயிகள் குறைந்தபட்சம் 2 கால்நடைகள் மற்றும் 0.5 ஏக்கர் நிலப்பரப்பில் தீவன சாகுபடி செய்தல் மற்றும் மின்சார வசதி உடையவர்களாகவும் இருக்கவேண்டும். இத்திட்டத்தின், பயனாளிகள் கடந்த பத்தாண்டுகளில் இதுபோன்ற அரசு திட்டங்களில் பயன்பெற்றவராக இருக்கக்கூடாது.
சிறு, குறு விவசாயிகள், பெண்கள், எஸ்சி.,எஸ்.டி.பிரிவினரும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்ட கிராம விவசாயிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படும். பயனாளிகளில் குறைந்தபட்சம் 30 சதவீதம் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் தேர்வு செய்யப்படுவார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் தீவன அபிவிருத்தித்திட்டத்தில் பயன்பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கு 15.7.2023ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.