பொன்னேரி: பொன்னேரியில் வேறொருவருடன் உள்ள கள்ளத்தொடர்பை கள்ளக்காதலன் தட்டி கேட்டதால் ஆத்திரமான இளம்பெண், அவரை நேற்றிரவு கூலிப்படையினர் 4 பேருடன் சேர்ந்து அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்தார். அப்பெண்ணை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். மேலும், தப்பி ஓடிய 4 கூலிப்படையினரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி, சிவன் கோயில் தெருவை சேர்ந்தவர் நாகராஜ். கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி பிரியா (25). பொன்னேரி, பாலாஜி நகரை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மகன் கோபாலகிருஷ்ணன் (24). தனியார் கொரியர் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். கோபாலகிருஷ்ணனுடன் பிரியாவுக்கு நெருங்கிய நட்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த 2 ஆண்டுகளாக கோபாலகிருஷ்ணனும் பிரியாவும் தகாத தொடர்பில் இருந்து வந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களாக கோபாலகிருஷ்ணன் வேலை காரணமாக அடிக்கடி வெளியூர் சென்றுள்ளார். இதனால் அவர் பிரியாவை அடிக்கடி சந்திக்க முடியவில்லை. இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வேறொரு நபருடன் பிரியா கள்ளத் தொடர்பில் இருந்து வந்திருக்கிறார். இதுபற்றி கள்ளக்காதலன் கோபாலகிருஷ்ணன் அறிந்ததும், பிரியாவை அடிக்கடி செல்போனில் தொடர்பு கொண்டு கள்ளக்காதலை கைவிடும்படி கூறியுள்ளார். இதை பிரியா கண்டித்து வந்திருக்கிறார். அதையும் மீறி கோபாலகிருஷ்ணன் தொந்தரவு செய்ததால், அவரை தீர்த்துக் கட்ட பிரியா திட்டமிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து, சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த கூலிப்படையை சேர்ந்த 4 பேரை பொன்னேரிக்கு பிரியா வரவழைத்தார். நேற்றிரவு திருஆயர்பாடி பகுதிக்கு கோபாலகிருஷ்ணனை ஆசைவார்த்தை கூறி பிரியா வரவழைத்தார். அங்குள்ள புளியந்தோப்பு பகுதியில் கோபாலகிருஷ்ணன் வந்ததும், அவரை பிரியா மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேரும் அரிவாளால் சரமாரி வெட்டி கொலை செய்தனர். பின்னர் பிரியா உள்பட 5 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பொன்னேரி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) வடிவேல்முருகன், எஸ்ஐ ஜெபதாஸ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டு விசாரித்தனர். கோபாலகிருஷ்ணனின் சடலத்தை கைப்பற்றி, பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பொன்னேரி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கள்ளக்காதலனை கூலிப்படையினருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு தலைமறைவான பிரியாவை இன்று அதிகாலை கைது செய்து, தப்பியோடிய 4 கூலிப்படையினர் பற்றிய விவரங்கள் உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். மேலும், தப்பியோடிய 4 கூலிப்படையினரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.