திருவள்ளூர்: திருவள்ளூரில் உள்ள 108 திவ்யதேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவப் பெருமாள் கோயிலில் ஆண்டுக்கு 2 முறை பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம். தை பிரம்மோற்சவத்திற்கு பிறகு சைத்ர பிரம்மோற்சவம் எனும் சித்திரை பிரம்மோற்சவத்தை முன்னிட்டு நேற்று தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு தினமும் காலையும், மாலையும் உற்சவர் ஸ்ரீ வீரராகவர், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
இதனைத் தொடர்ந்து நேற்று விடியற்காலை 4.45 மணியளவில் உற்சவர் ஸ்ரீ வீரராகவ பெருமாள் தேவி, பூதேவி சமேதராக தேரில் எழுந்தருளினார். பின்னர் காலை 7.30 மணிக்கு திருத்தேர் புறப்பாடு கோலாகலமாக நடைபெற்றது. வழி நெடுகிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இரவு 9.30 மணிக்கு கோயிலுக்கு ஸ்ரீ வீரராகவ பெருமாள் எழுந்தருளுதலும் நடைபெற்றது.
இன்று காலை 9.30 மணிக்கு திருமஞ்சனமும், மாலை 3 மணிக்கு திருப்பாதம் சாடி திருமஞ்சனமும், 7.30 மணிக்கு குதிரை வாகனத்தில் எழுந்தருளுதலும், 4ம் தேதி விடியற்காலை 4 மணிக்கு ஆள்மேல் பல்லக்கும், 10.30 மணிக்கு தீர்த்த வாரியும், இரவு 7 மணிக்கு விஜயகோடி விமான நிகழ்ச்சியும், 5ம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனமும், காலை 10.30 மணி அளவில் த்வாதச ஆராதனமும், இரவு 7 மணிக்கு பக்தி உலாவும், 9 மணியளவில் கண்ணாடி பல்லக்கும், 11.30 மணிக்கு கொடி இறக்கமும் நடைபெற உள்ளது.