சென்னை: பொறியியல் மாணவர் சேர்க்கை விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டு பொறியியல் கலந்தாய்வில் ரேண்டம் எண்ணை வழங்கும்போது 10ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பபதிவு மே 5-ம் தேதி தொடங்கி ஜூன் 4ம் தேதி நிறைவடைந்தது. பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு ரேண்டம் எண்கள் வழங்கப்படும். அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு கலந்தாய்வு நடைபெறுவது வழக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரே கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று இருந்தால், அவர்கள் பெற்ற மதிப்பெண் பிறந்த தேதி அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 2023-24ம் கல்வியாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கும் போது 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கிடுவதில் இருந்து விலக்களித்து, மாணவர் சேர்க்கைக்கான விதியில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் பொறியியல் மாணவர் சேர்க்கை விதிமுறைகளில் மாற்றம் செய்து உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறாததால் விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அத்துடன் நடப்பாண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை நடப்பாண்டில் சமவாய்ப்பு எண் வழங்கும் போது, 10ம் வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.