பெங்களூரு: நிலவை ஆய்வு செய்வதற்காக ரூ.615 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள சந்திராயன் 3 விண்கலம் வரும் ஜூலை 12-ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ நிலவை ஆய்வு செய்வதற்காக அடுத்தடுத்த விண்கலத்தை அனுப்பி வருகிறது. அந்த வகையில் நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக வரும் ஜூலை 12-ம் தேதி ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் மூலம் சந்திராயன் 3 விண்கலத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது.
இத்தகவலை உறுதி செய்துள்ள இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் இந்த விண்கலம் தொடர்பாக சோதனை மார்ச் மாதமே முடிவடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். தற்போது பெங்களூருவில் உள்ள செயற்கைகோள் மையத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த விண்கலத்தில் பேர் லோடுகளை பொருந்தும் பணி நடைபெற்று வருவதாகவும், இது பின்னர் ஸ்ரீஹரிகோட்டா கொண்டு செல்லப்பட்ட ஏவப்பட்ட இருப்பதாகவும் கூறியுள்ளார். ஏற்கனவே நிலவை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட சந்திராயன் 2 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையை அடைந்து இருந்த போதிலும் அதன் லேண்டார் நிலவின் மேற்பரப்பில் கடந்த 2019-ம் ஆண்டு மோதி செயலிழந்தது.
இந்நிலையில் அதுபோன்ற மீண்டும் ஒரு சேதம் ஏற்பட்டு விட கூடாது என என்பதற்காக விண்கலம் கட்டமைப்பில் பல்வேறு கட்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக விண்கலத்தின் லேண்டர் மெதுவாக நிலவின் மேற்பரப்பில் தரையிறங்கி ரோவர் மூலம் நிலவின் மேற்பரப்பின் ரசாயன மாதிரிகளை ஆய்வு செய்திடும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த விண்கலமானது விண்ணில் ஏவப்பட்ட 42 நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 23-ம் தேதி நிலவில் இறங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் நிலவை பற்றிய பல்வேறு தகவல்கள் தெரியவரும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.