Thursday, May 23, 2024
Home » சந்திரபாபு மற்றும் பவன் கல்யாண் திருப்பதி சட்டமன்ற தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

சந்திரபாபு மற்றும் பவன் கல்யாண் திருப்பதி சட்டமன்ற தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும்

by Lakshmipathi

*முன்னாள் எம்.எல்.ஏ. கண்ணீர் பேட்டி

திருமலை : சந்திரபாபு மற்றும் பவன் கல்யாண் திருப்பதி சட்டமன்ற தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று முன்னாள் எம்எல்ஏ கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு தேசம், பாஜக மற்றும் ஜனசேனா கூட்டணியால் பல ஆண்டுகளாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத நிலையில் பல மூத்த தலைவர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள் என பலரும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு சிவராமராஜ், முத்தரப்பு வெங்கடேஸ்வரராவ், கே.அப்பல்நாயுடு, யனமல கிருஷ்ணடு, கே.எஸ்.ஜவஹர், ஜே.டி.ராஜசேகர், பொதின மகேஷ் போன்ற தலைவர்கள் அதிருப்தியில் உள்ள நிலையில் சுயேச்சையாக போட்டியிட தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த தலைவரும், திருப்பதியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏவுமான சுகுணம்மா கண்ணீருடன் நேற்று நிருபர்களுடன் கூறியதாவது:
எனது கணவரும், மறைந்த எம்.எல்.ஏ.வுமான வெங்கடரமண தெலுங்கு தேசம் கட்சியில் 2004 மற்றும் 2014ம் ஆண்டுகளில் திருப்பதியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக இறந்த பின்னர் அந்த இடைத்தேர்தலில் 2015ல் திருப்பதி சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி பெற்றேன். 2019ஆம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தாலும், தொடர்ந்து மக்கள் மத்தியில் எப்போதும் இருந்துகொண்டு மாவட்டத்தில் கட்சியை வலுப்படுத்த கடுமையாக உழைத்தேன்.

தனது சொந்த செலவில் கட்சியையும், தொண்டர்களையும் சோர்வு அடைய விடாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கின்றேன். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அரசியலுக்கு வந்தேன். போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் மக்களுக்குச் சேவை செய்வதை நிறுத்தமாட்டேன். மக்களுக்கு எப்பொழுது தேவை வந்தாலும் அவர்களுடன் துணையாக இருப்பேன்.

இந்த தேர்தலில் கூட்டணி காரணமாக ஜன சேனா கட்சிக்கு வழங்கப்பட்டது. இதில் பவன் கல்யாண் போட்டியிடுவார் என எதிர்பார்தேன். ஆனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் 5 ஆண்டுகள் எம்.எல்.ஏவாக இருந்தவருக்கு ஜனசேனா வேட்பாளராக ஆரணி சீனிவாசலு போட்டியிடுகிறார். சந்திரபாபு சர்வே எடுத்தார் முடிவுகள் என்ன ஆனது? எங்கிருந்தோ வருபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என கூறியதால் நான் சம்மதித்தாலும் கட்சியில் உள்ள மற்றவர்கள் ஏற்க சம்மதிக்கவில்லை. தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா தலைவர்கள் திருப்பதி சட்டமன்ற தொகுதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டு வருகின்றனர்.

ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினருடன் நாங்கள் தொடர்ந்து போராடி வருகிறோம். ஆனால் தற்போது அந்த கட்சியில் இருந்து வருபவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்ததால் மக்கள் ஏற்றுக் கொள்வதில்லை. சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் எண்ணம் எனக்கு இல்லை. திருப்பதி சட்டமன்ற தொகுதியை சந்திரபாபு மற்றும் பவன் கல்யாண் மறுபரிசீலனை செய்வார்கள் என்று நம்புகிறேன்.

பாஜகவில் எம்.பி.யாக வர பிரசாத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு எம்.பியாக திருப்பதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்று 2019 ஆண்டு கூடுர் எம்.எல்.ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டு இப்போது அவருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை என்றவுடன் பாஜகவில் காலை இணைந்தவருக்கு மாலையில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தெலுங்கு தேசம் கட்சிக்காக உழைத்தவர்கள் என்ன செய்வார்கள் கட்சி தலைமை ஆலோசிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

You may also like

Leave a Comment

seven − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi