கண்ணமங்கலம் : கண்ணமங்கலம் அருகே திரவுபதி அம்மன் கோயில் அக்னி வசந்த விழாவில் நேற்று துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது.கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் புஷ்பகிரி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த 3ம் தேதி முதல் அக்னி வசந்த விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், மகாபாரத சொற்பொழிவு மற்றும் தெருக்கூத்து நாடகம் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
இதில் பீமன், அர்ஜூனன், திரவுபதி, காந்தாரி வேடமணிந்த நாடக கலைஞர்கள் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியை தத்ரூபமாக நடித்து காட்டினர். இதில், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர், மாலையில் நடந்த தீமிதி விழாவில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.