Thursday, May 16, 2024
Home » சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: வாக்குச்சீட்டுகளை இன்று தாக்கல் செய்ய உத்தரவு

சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரம் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்: வாக்குச்சீட்டுகளை இன்று தாக்கல் செய்ய உத்தரவு

by Dhanush Kumar

புதுடெல்லி: சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட தேர்தல் அதிகாரிக்கு சரமாரி கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பஞ்சாப் மற்றும் அரியானா மாநிலங்களின் தலைநகரான யூனியன் பிரதேசம் சண்டிகரரின் மேயர் தேர்தல் இந்த மாதம் முதல் வாரத்தில் நடந்தது. அதில் பாஜ மேயர் வேட்பாளர் மனோஜ் சோங்கர் 16 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், ஆம் ஆத்மி – காங்கிரஸ் கூட்டணியின் மேயர் வேட்பாளர் 12 வாக்குகள் பெற்றதாகவும், எட்டு வாக்குகள் செல்லாது என தேர்தல் அலுவலர் அறிவித்தார். திட்டமிட்டு வாக்குச்சீட்டுகளில் சில திருத்தம் செய்து வாக்குச்சீட்டு செல்லாது என தேர்தல் நடத்தும் அலுவலர் அறிவித்ததாக கூறி அதற்கான வீடியோவை காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வெளியிட்டன. இதைத்தொடர்ந்து இந்த விவகாரம் தொடர்பாக ஆம் ஆத்மி-காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த பஞ்சாப்-அரியானா உயர்நீதிமன்றம், தேர்தல் அதிகாரி பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மேற்கண்ட விவகாரத்தில் ஆம் ஆத்மி கவுன்சிலர் குல்தீப் குமார் (தோற்கடிக்கப்பட்ட மேயர் வேட்பாளர் ) தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவை கடந்த 5ம் தேதி முன்னதாக விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, “சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்தது என்பது ஜனநாயக படுகொலை என்று கடும் கண்டனம் தெரிவித்து விசாரணையை நேற்றைக்கு ஒத்திவைத்திருந்தது. இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சண்டிகர் மேயர் தேர்தலில் நடந்ததை சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. அது ஒரு தீவிரமானது என்பதால் தேர்தல் நடத்திய அதிகாரியிடம் பல முக்கிய கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. ஒருவேளை அவர் பொய்யான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்தால் நிச்சயம் வழக்கு பதிவு உட்பட கடுமையான நடவடிக்கைகள் அவர் மீது எடுக்கப்படும் என தெரிவித்த தலைமை நீதிபதி,” விசாரணைக்காக நேரில் ஆஜராகி இருந்த தேர்தல் அதிகாரி அனில் மாஷிடம் சரமாரி கேள்விகளை எழுப்பினார்.

அதில், “வாக்கு சீட்டுகளில் எதற்காக நீங்கள் எழுதினீர்கள். அதற்கான காரணம் என்ன. அவ்வாறு செய்வது என்பது தேர்தல் விதிமுறைகளுக்கு எதிரானது என்று அதிகாரியாக இருக்கும் உங்களுக்கு தெரியாதா?. குறிப்பாக வாக்கு சீட்டுகளில் எக்ஸ் போன்ற குறியீட்டை எதற்காக போட்டீர்கள். அதனை நாங்கள் சிசிடிவி காட்சிகளில் தெளிவாக பார்த்துள்ளோம். அதுபோன்று செய்ய உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது. தேர்தல் நடத்தும் அதிகாரி இதுபோன்று நடந்து கொள்வது என்பது ஜனநாயகத்தில் ஒருபோதும் ஏற்கத்தக்க ஒன்றாக இருக்காதே என காட்டமாக கேட்டார். இதையடுத்து அதற்கு பதிலளித்த தேர்தல் அதிகாரி அனில் மாஷி சில வாக்கு சீட்டுகள் சிதைந்த வகையில் இருந்தது. அதனால் அவற்றை தனியாக பிரித்து வைப்பதற்காக அதில் எக்ஸ் போன்று குறியிட்டேன். குறிப்பாக நான் இருந்த அறையில் ஏராளமான கேமராக்கள் இருந்தது. அதனை நான் சாதாரனமாக தான் பார்த்தேன் என்று கூறினார். அப்போது மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி அப்படியென்றால் வாக்கு சீட்டில் எக்ஸ் குறியை போட்டதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள் தானே? என்று கேட்டார். அதற்கு ஆம் என்று தேர்தல் அதிகாரி ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து மீண்டும் குறுக்கிட்ட தலைமை நீதிபதி,” ஒரு தேர்தல் நடத்தும் அதிகாரி தேர்தல் சட்ட விதி 11ன் படி வாக்குச் சீட்டுகளில் கையெழுத்து மட்டும் தான் போட முடியுமே தவிர, இதுப்போன்று குறியீடுகளை எழுத முடியாது. நீங்கள் செய்த அனைத்தும் சட்ட விதிகளுக்கு எதிரானதாக இருக்கிறது. குறிப்பாக வாக்குச்சீட்டுகளை தனியாக பிரித்து பார்ப்பதற்காக தான் அவ்வாறு குறியிட்டேன் என தேர்தல் அதிகாரியான நீங்கள் கூறியுள்ளது முறைகேட்டில் ஈடுபட்டதை தெளிவுப்படுத்தி காட்டுகிறது. அதனால் கண்டிப்பாக நீங்கள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டியவர் ஆகும். ஜனநாயகத்தில் இதுபோன்று தேர்தல் அதிகாரி செயல்பட்டதை ஒருபோதும் ஏற்கவோ அல்லது அனுமதிக்கவோ முடியாது.

அதனால் இந்த விவகாரத்தில் ஒரு துணை ஆட்சியரையோ அல்லது எந்த அரசியல் கட்சியிடமும் தொடர்பில் இல்லாத ஒரு நேர்மையான அதிகாரியையோ நியமனம் செய்து, இந்த விவகாரத்தில் பிரச்சனை எங்கிருந்து ஆரம்பித்ததோ அங்கிருந்து மீண்டும் தேர்தல் நடவடிக்கைகளை தொடர உச்ச நீதிமன்றம் நினைக்கிறது. எனவே உயர்நீதிமன்றத்தின் பதிவாளர் அனைத்து வாக்கு சீட்டுகள் தொடர்பான விவரங்கள், வாக்குச்சீட்டுகள், அதுசார்ந்த முழுமையான வீடியோ பதிவுகள் அனைத்தையும் நாளை (இன்று) பிற்பகல் 2 மணிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அதனை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. மேலும் இதுபோன்ற விவகாரங்களில் குதிரை பேரம் நடப்பது என்பது உச்ச நீதிமன்றத்திற்கு அதிகப்படியான வருத்தத்தை தரக்கூடியதாக இருக்கிறது’’ என தலைமை நீதிபதி தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “இந்த விவகாரத்தில் குதிரை பேரம் நடந்துள்ளது என்பதை எப்படி இப்போதே முடிவு செய்ய முடியும். எனவே அந்த கருத்தை மாற்ற வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார். இதையடுத்து ‘நடந்த ஒன்றைத் தானே கூறியுள்ளோம்’ என தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,” வழக்கை நாளைக்கு (இன்று) ஒத்திவைப்பதாகவும், அப்போதும் தேர்தல் அதிகாரி அனில் மாஷி கண்டிப்பாக நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டார்.

* பா.ஜ பக்கம் சாய்ந்த 3 ஆம்ஆத்மி கவுன்சிலர்கள்

சண்டிகர் மேயராக தேர்வு செய்யப்பட்ட பாஜவை சேர்ந்த மனோஜ் சோங்கர் நேற்று முன்தினம் ராஜினாமா செய்தார். இந்நிலையில் ஆம்ஆத்மி கவுன்சிலர்கள் நேகா, பூனம், குருசரண் காலா ஆகியோர் நேற்று பா.ஜ மாநில தலைவர் வினோத் தாவ்டே தலைமையில் பா.ஜவில் நேற்று இணைந்தனர்.

You may also like

Leave a Comment

one + two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi