ஆந்திர மாநிலத்தின் வடக்கு பகுதியைப் பிரித்து உருவாக்கப்பட்ட தெலங்கானாவின் முதல் முதல்வர் என்ற பெருமைக்குரியவர் சந்திரசேகரராவ். 2014ம் ஆண்டு முதன்முறையாக மாநில அரியாசனத்தில் அமர்ந்த சந்திர சேகரராவ், 2018ம் ஆண்டில் நடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 2வது முறையா க முதல்வராக நீடிக்கிறார். பதவிக்காலம் முடிவதால், நவம்பர் 30ம் தேதி தேர்தல் நடக்கிறது.தெலங்கானாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். நீர்ப்பாசனம், தொழில் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தில் அதிக முதலீடுகள் போன்றவை மாநில பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான காரணிகளாக அமைந்தன.
இதனால், தெலங்கானாவில் தனிநபர் வருவாய் சிக்கிம் மற்றும் கோவாவுக்கு அடுத்ததாக நாட்டிலேயே மூன்றாவது இடத்தில் இருக்கிறது. அதாவது, மாநிலம் உருவானபோது தனிநபர் வருமானம் ரூ.1.12 லட்சமாக இருந்தது. இதுபோல் மாநிலம் தொடங்கியபோது இருந்த 4.51 லட்சம் கோடியாக இருந்த ஜிடிபி தற்போது ரூ.13.1 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது 12.1 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. இந்திய ஜிடிபி வளர்ச்சியான 7.2 சதவீதத்தை விட இது அதிகம். இதுபோன்ற சாதனைகள்தான், மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி பீடத்தில் அமர்வதற்கான வாய்ப்பை சந்திரசேகரராவுக்குப் பெற்றுத்தருமான என்ற கேள்வியை முன்னிறுத்தியுள்ளது.
அதேநேரத்தில், இந்த ஹாட்ரிக் சாதனையை படைக்க அவர் முன் பல சவால்களும் உள்ளன. இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியில் இருந்ததால் அரசுக்கு எதிரான மக்களின் மனோநிலை, வீடு திட்டம், தலித் குடும்பங்களுக்கு தொழில் தொடங்க ரூ.10 லட்சம் மானியம் போன்ற திட்டங்களை செயல்படுத்தாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுமட்டுமின்றி, காலேஸ்வரம் போன்ற உள்கட்டமைப்பு திட்டங்கள் மூலம் முதல்வர் குடும்பத்தினர் ஏராளமாக சொத்து சேர்த்ததாக ஊழல் புகார்களை காங்கிரஸ், பாஜ உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. இதுபோல், கட்சியில் சீட் கிடைக்காத சிலர் காங்கிரசுக்கு தாவி விட்டனர்.
மேலும், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் உள்ளவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் போதுமான வேட்பாளர்களை நிறுத்தவில்லை என்ற குற்றச்சாட்டும் சந்திரசேகரராவ் மீது முன்வைக்கப்படுகிறது. அதாவது, மாநிலத்தின் மக்கள் தொகையில் 7 சதவீதம் உள்ள ரெட்டி சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு 39 வேட்பாளர்கள் உள்ள நிலையில், மக்கள் தொகையில் 52 சதவீத உள்ள இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவை சேர்ந்த 24 வேட்பாளர்கள்தான் நிறுத்தப்பட்டுள்ளனர். இது, இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, காங்கிரஸ் அல்லது பாஜ இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும் பட்சத்தில், ஓபிசி வாக்குகள் மாறக்கூடிய சூழ்நிலைகள் உள்ளன. இதுமட்டுமின்றி, மாநில வளர்ச்சித் திட்டங்களில் கவனம் செலுத்துவதாக கூறிக் கொண்டாலும், இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்பை உருவாக்க கேசிஆர் அரசு தவறி விட்டது என குற்றம் சாட்டுகின்றனர். தேசிய அரசியலில் பிரகாசிக்க வேண்டும்,
பிற மாநிலத்திலும் தங்கள் கட்சியின் ஆதிக்கம் இருக்க வேண்டும் எனக்கருதில தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பெயரை பாரத் ராஷ்டிரீய சமிதி கட்சி என மாற்றினார் சந்திரசேகரராவ். தேசிய அரசியலில் சாதிப்பது ஒருபுறம் இருக்க, மாநிலத்தில் மூன்றாவது முறையாக முதல்வராகி ஹாட்ரிக் சாதனை படைப்பாரா என்ற கேள்விக்கு அவரது தேர்தல் வியூகமும், சாதனைகளை கொண்டு சேர்ப்பதும்தான் பதில் தரும் என்கின்றனர் விமர்சகர்கள்.