சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தற்போது வேட்பாளர்களை அறிவித்து வேட்பு மனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வேட்புமனு தாக்கல் கடந்த 20ம் தேதி தொடங்கிய நிலையில் இன்றுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இதுவரை 751 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் 39 தொகுதிகள் இருந்தாலும் அவற்றில் சில தொகுதிகள் ஸ்டார் தொகுதி என கண்டறியப்பட்டுள்ளது. அந்த வகையில் ஒன்று தான் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி. இந்த தொகுதியில், கடந்த 2019ம் ஆண்டு போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தயாநிதி மாறன் வெற்றி பெற்றார்.
இந்த சூழ்நிலையில் தான் மத்திய சென்ைன நாடாளுமன்ற தொகுதியை தயாநிதிமாறனுக்கே மீண்டும் திமுக தலைமை வழங்கியுள்ளது. ஏற்கனவே கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வந்த அவர், அனல் பறக்கும் பிரச்சாரத்தை தொடங்கி இருந்தார். தேர்தல் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்னரே இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் மத்திய சென்னையில்தான் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தை தொடங்கி வைத்தார். இதனால் மத்திய சென்னை தொகுதியில் திமுக நிர்வாகிள், தொண்டர்கள் தீவிர பிரசாரத்தை தொடங்கிவிட்டனர். இன்று காலை மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட கோபாலபுரம் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
இதை தொடர்ந்து, மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் இன்று காலை 11 மணி அளவில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக செனாய் நகர் புல்லா அவென்யூவில் உள்ள சென்னை மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அவருக்கு திமுகவினர் மற்றும் பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதையடுத்து, தேர்தல் ஆணைய விதிப்படி 5 பேருடன் தேர்தல் அலுவலகத்துக்குள் சென்றார். அங்கு மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் பிரவீன்குமாரிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருடன் அமைச்சர் சேகர்பாபு, மாவட்ட செயலாளர் சிற்றரசு, எம்எல்ஏக்கள் எம்.கே.மோகன், வெற்றியழகன் ஆகியோர் உடன் சென்றனர்.
வேட்பு மனு தாக்கலுக்கு பிறகு வெளியில் வந்த மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் தயாநிதிமாறன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்தியா கூட்டணி சார்பில் திமுகவில் மத்திய சென்னை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மீண்டும் எனக்கு வாய்ப்பளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முறைப்படி இன்று மத்திய சென்னை வேட்பாளராக போட்டியிடுவதற்காக எனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக மாவட்ட செயலாளர்கள் சேகர்பாபு, சிற்றரசு, எம்எல்ஏக்கள் எம்.கே.மோகன், வெற்றியழகன் ஆகியோருடன் வந்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம் முறைப்படி எனது வேட்பு மனுவை தாக்கல் செய்தோம்.
கண்டிப்பாக, கடந்த 5 ஆண்டுகளில் மக்கள் பணிகளில் சிறந்த முறையில் பணியாற்றியுள்ேளாம். மக்களின் இன்ப, துன்பங்களில் நாங்கள் பங்கேற்றுள்ளோம். அது கொரோனா காலமாக இருந்தாலும் சரி, பேரிடர் காலமாக இருந்தாலும் சரி, அனைத்திலும் திமுகவினர் முதல் ஆளாக நின்று மக்கள் பணியாற்றியுள்ளோம். கண்டிப்பாக மத்திய சென்னை தொகுதி மக்கள் மீண்டும் எனக்கு ஒரு வாய்ப்பினை தருவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதை தொடர்ந்து, அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறனை பொறுத்த அளவில் அடிமட்டம் வரை சென்று மக்களை சந்தித்த ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்று பெயர் பெற்றவர். குடிசை பகுதியில் இருக்கிற மக்களின் துயரத்தை போக்குவதற்காக அவர்கள் உபயோகப்படுத்துகிற கழிப்பறைக்கே சென்று எந்தவித சங்கடமும் இல்லாமல் ஆய்வு செய்தவர்.
கழிப்பிட வசதிக்கு மட்டும் அவரது நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இதுவரையில் ரூ.3 கோடி வழங்கிய ஒரே நாடாளுமன்ற உறுப்பினர் அவர் மட்டுமாகத் தான் இருக்க முடியும். பாஜ வேட்பாளர் விமர்ச்சித்ததாக கேட்கிறீர்கள். சட்டை கலையாமல் தேர்தலுக்கு வருபவர்கள் வேண்டும் என்றாலும் கூட, நோட்டாவுக்காக போட்டி போடுபவர் வேண்டும் என்றாலும் கூட இதுபோன்ற சொல்லுக்கு தகுதி உடையவர்களாக இருப்பார்களே தவிர, திமுகவை பொறுத்தவரை களத்தில் நின்று பணியாற்றுகின்ற முதன்மை கட்சி.
உழைப்பாளர்கள், பாட்டாளிகள், சமூகத்தில் பின்தங்கிய மக்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் திமுக. அவர்களுக்காக தொடர்ந்து களத்தில் இருக்கிற ஒரே இயக்கம் தமிழகத்தில் திமுக மட்டுமே என்று பாஜ வேட்பாளருக்கு இந்த நேரத்தில் பதிலாக சொல்லிக் கொள்கிறேன். தமிழகத்தை பொறுத்தவரை போட்டி என்பது இந்தியா கூட்டணியோடு அல்ல. இந்த கூட்டணிக்கு அடுத்தபடியாக யார் வருவது என்பதில் தான் இப்போது 3, 4 கட்சிகளுக்கு இடையே போட்டியாக இருக்கிறது.
இந்தியா கூட்டணிக்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை. கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த நாடாளுமன்ற தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெறுவது தான் கள நிலவரமாக இருக்கிறது. முதல்வரின் அனல் வீசும் பிரச்சாரம் ஒருபுறம், புயலை கிளப்புகிற வகையில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் ஒருபுறம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தையும் சூறாவளியாக சுற்றி வருகின்ற ஒரே இயக்கம் இன்றைக்கு இந்தியா கூட்டணி தான்.
இவ்வாறு அவர் கூறினார்.