Friday, May 3, 2024
Home » செய்யாறு அடுத்த ஏனாதவாடியில் கிரானைட் கற்கள் திருட்டை தடுக்க பாதுகாப்பு வேலி: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

செய்யாறு அடுத்த ஏனாதவாடியில் கிரானைட் கற்கள் திருட்டை தடுக்க பாதுகாப்பு வேலி: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

by MuthuKumar

செய்யாறு: செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தில், கிரானைட் கற்கள் வெட்டிக் கடத்தப்படுவதை தடுக்க பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தில் சுடுகாடு அருகே 3 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்த 10 நாட்களாக மர்ம நபர்கள் சிலை செய்ய கற்கள் தோண்டி எடுப்பதாக கூறி, இந்த நிலத்தில் இட்டாச்சி வாகனம் மூலம் மண்ணை கிளறி கருங்கற்களை எடுத்து 2 லாரி லோடு கற்களை கடத்தி சென்றுள்ளனர்.

இதுகுறித்து சந்தேகம் அடைந்த கிராம மக்கள் இட்டாச்சி வாகனத்தை மடக்கி கேட்டபோது அனுமதி பெற்றுதான் கற்கள் தோண்டி எடுப்பதாக கூறியுள்ளனர். ஆனால், கிராம மக்கள் உடனடியாக பணியை நிறுத்த கூறியதும் ஹிட்டாச்சி வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர் தப்பிச்சென்றனர். பின்னர், வருவாய்த்துறை, கனிம வளத்துறை மற்றும் காவல்துறை ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், விழுப்புரம் மண்டல கனிமவளத்துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தில் நேற்று முன்தினம் மாலை ஆய்வு செய்தனர்.

பின்னர், அங்கிருந்த இட்டாச்சி வாகனத்தை பறிமுதல் செய்து மோரணம் போலீசாரிடம் ஒப்படைக்க உத்தரவிட்டனர். தொடர்ந்து, நேற்று விழுப்புரம் கனிம வளத்துறை ஆய்வாளர் மூர்த்தி, திருவண்ணாமலை மாவட்ட கனிம வளத்துறை உதவி புவியியலாளர் மெகபூப், செய்யாறு தாசில்தார் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் சத்தியா, ஊராட்சி மன்ற தலைவர் யசோதா எல்லப்பன் ஆகியோர் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்து கிரானைட் கற்கள் கடத்தப்பட்டதா? என ஆய்வு செய்தனர்.

இந்நிலையில், பொதுமக்களின் அறியாமையை பயன்படுத்தி நவீன சேட்டிலைட் தொழில்நுட்ப உதவியுடன் பூமியின் அடியில் உள்ள கிரானைட் கற்கள் தோண்டி திருடப்பட்டு வருவது அரசுக்கு இழப்பை ஏற்படுத்துகிறது. எனவே, அனைத்து துறைகளும் விழிப்புடன் ஒருங்கிணைந்து பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டு கனிம வளங்களை பாதுகாக்க வேண்டும். மேலும், ஏனாதவாடி கிராமத்தில் பல கோடி மதிப்பிலான கிரானைட் கற்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், கிரானைட் கற்களை திருடி செல்லாமல் இருக்க சம்பந்தப்பட்ட இடத்தில் பாதுகாப்பு வேலி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

three × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi