புதுடெல்லி: தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் தகவல்களை வௌியிடாமல் இருக்க சிபிஐக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தகவல்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் 24வது பிரிவில் தேசிய புலனாய்வு அமைப்பு, ரா உளவு அமைப்பு, புலனாய்வுத்துறை அமலாக்கத்துறை உள்ளிட்ட அமைப்புகள் பாதுகாப்பு அமைப்புகளுக்கு விதி விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்புகளுக்கு 24வது பிரிவின்கீழ் அளிக்கப்பட்டுள்ள விதி விலக்கு ஊழல் குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல்கள் தொடர்பான விவரங்களை அளிப்பதற்கு பொருந்தாது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தௌிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லி எய்ம்சில் உள்ள ஜெய்பிரகாஷ் நாராயண் அபெக்ஸ் ட்ரமா சென்டருக்கு சில மருந்து பொருட்கள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.
இதுகுறித்து சிபிஐ நடத்திய விசாரணை விவரங்களை வௌியிட வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் இந்திய வனப்பணி அதிகாரி சஞ்சீவ் சதுர்வேதி கோரியிருந்தார். ஆனால் 24வது பிரிவை காரணம் காட்டி தகவல்களை அளிக்க சிபிஐ மறுத்து விட்டது. இதுதொடர்பாக சதுர்வேதியின் முறையீட்டை விசாரித்த மத்திய தகவல் ஆணையம், சஞ்சீவ் சதுர்வேதி கேட்ட விவரங்களை வழங்குமாறு சிபிஐக்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிபிஐ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணையில், “பிரிவு 24ல் அளிக்கப்பட்டுள்ள விலக்கு ஊழல், மனித உரிமை மீறல் குறித்த விவரங்களை வௌியிட பொருந்தாது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சிபிஐக்கு முழு விலக்கு அளிக்கப்படவில்லை. எனவே சஞ்சீவ் சதுர்வேதி கேட்ட தகவல்களை வௌியிட வேண்டும்” என நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் உத்தரவிட்டார்.