ஸ்ரீபெரும்புதூர்: குன்றத்தூர் ஒன்றியம், வைப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட கூழங்கலச்சேரி கிராமத்தில் விவசாய நிலங்களில் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் பயிர்களை மேய்வதாக காஞ்சிபுரம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால், கால்நடைகள் விளை நிலத்தில் மேய்வதை தடுப்பது குறித்து, கூழங்கலச்சேரி கிராமத்தில் வருவாய் துறை சார்பில், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் தலைமையில் கருத்து கேட்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனை, கால்நடை வளர்ப்பவர்கள் ஒருசிலரை தவிர பெரும்பாலானவர்கள் கூட்டத்தை புறக்கணித்தனர்.
கூட்டத்தில், கலந்துகொண்ட ஒருசிலர் கால்நடைகளுக்கு தீவனங்கள் வாங்கி கொடுக்க, வசதி இல்லாததால், மானாவரி நிலத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு அழைத்து செல்கிறோம் எனக்கூறி கிராம நிர்வாக அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இதனைதொடர்ந்து, கால்நடை வளர்ப்பவர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட போவதாகக்கூறி கூட்டத்தை புறக்கணித்து பாதியிலே வெளியேறினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.