வருசநாடு: நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் கனமழையால் சின்னச்சுருளி மற்றும் யானைகெஜம் அருவியில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏறபட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. தேனி மாவட்டம், வருசநாடு அருகே சின்னச்சுருளி அருவி உள்ளது. மேகமலை திருவில்லிபுத்தூர் புலிகள் சரணாலயத்தில் அமைந்துள்ள இந்த அருவிக்கு திண்டுக்கல், தேனி, மதுரை, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் தினமும் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் அருவியில் நீர்வரத்து இருக்கும்.
இதனை தொடர்ந்த தென்மேற்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக கடந்த சில நாட்களாக மேகமலை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து சாரல்மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று இரவு இப்பகுதியில் திடீரென கனமழை கொட்டியது. இதனால் சின்னசுருளி அருவியில் இன்று காலை திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் வர வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். இதேபோல், வருசநாடு அருகே உப்புத்துறை மலை அடிவாரத்தில் யானைகெஜம் அருவி அமைந்துள்ளது. இந்த அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் நேற்று கனமழை பெய்தது காரணமாக இன்று காலை அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இந்த அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.