டெல்லி: சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஜூன் 4ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும். அதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 102 மக்களவை தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து, இரண்டாம் கட்டத் தேர்தல் 89 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதனால் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைந்தது.
இந்நிலையில் டெல்லி, ஜவஹர் பவன் உள்ள சமாஜிக் நியாய சம்மேளனத்தில் சம்ருதா பாரத் அறக்கட்டளை சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; சாதிவாரி கணக்கெடுப்பு என்பது எனக்கு அரசியல் அல்ல; அது எனது வாழ்க்கையின் நோக்கம். I.N.D.I.A. கூட்டணி ஆட்சிக்கு வந்தவுடன் முதல் பணியாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்.
மேலும், நாட்டில் உள்ள தொழிலதிபர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ.16 லட்சம் கோடி அளவுக்கு கடனை தள்ளுபடி செய்திருக்கிறார். பிரதமர் மோடி தள்ளுபடி செய்த பணத்தை தொழிலதிபர்களிடமிருந்து மீட்டு அதனை நாட்டில் உள்ள 90 சதவீத மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன். இதனை காங்கிரஸ் தேர்தல் அறிக்கையிலும் உறுதி அளித்திருக்கிறோம். இவ்வாறு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.