சேலம்: அமலாக்கத்துறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ராமநாயக்கன் பாளையம் காரமணி என்ற இடத்தை சேர்ந்தவர்கள் விவசாயி கண்ணையன் (73), இவரது சகோதரர் கிருஷ்ணன். இவர்கள் இரண்டு பேருக்கும் சொந்தமாக 6 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை அபகரிப்பதற்காக பாஜக சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன், விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணனுக்கு பல்வேறு இடையூறு கொடுத்துள்ளார்.
அதுமட்டுமின்றி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நிலம் தன்னுடையது என்றும் அதற்கு ஒரு லட்ச முன்பணமாக வழங்கி இருப்பதாக கூறி போலி பாத்திரம் ஒன்றை தயார் செய்துள்ளார். பின்னர் இது தொடர்பாக பாஜக சேலம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் குணசேகரன் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. இதனையடுத்து அமலாக்கத்துறையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணையன், கிருஷ்ணன் ஆகியோர் சேலம் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்தனர்.
அந்த மனுவில் நிலத்தை அபகரிக்க முயன்ற விவகாரத்தில் பாஜக பிரமுகர் குணசேகரன் மீதும் நடவடிக்கை எடுக்க மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர். பாஜக பிரமுகர் குணசேகரனுக்கு உடந்தையாக இருந்த ED அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஜாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி சேலம் எஸ்.பி.யிடம் விவசாயிகள் புகார் அளித்துள்ளனர். மேலும், தங்களுக்கு பாதுகாப்பு அளிக்கக் கோரியும் எஸ்.பி. அருண் கபிலனை சந்தித்து விவசாயிகள் மனு அளித்தனர்.