நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப் பூ சாகுபடி நடந்து வருகிறது. மாவட்டத்தில் நடக்கும் இருபோக சாகுபடியில் கன்னிப்பூ சாகுபடியின் போது அம்பை 16, திருப்பதிசாரம் 5 ரக நெல் சாகுபடியும், கும்பபூ சாகுபடியின்போது பொன்மணி, திருப்பதிசாரம் 3 ரக நெல் சாகுபடி செய்து வருகின்றனர். இதனை தவிர பாரம்பரிய நெல் ரகங்களையும் பல விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். குமரி மாவட்டத்தில் குளத்து, ஆற்றுபாசனத்தை பயன்படுத்தி சாகுபடி நடக்கிறது. கன்னிப்பூ சாகுபடியின் போது 6500 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி நடக்கும். கும்பபூ சாகுபடியின் போது 5500 ஹெக்டேர் முதல் 6000 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது சுமார் 5 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல்சாகுபடி பணி முடிந்து உள்ளது.
பல பகுதிகளில் தண்ணீர் இல்லாத காரணத்தால், சாகுபடி பணிகள் தாமதம் ஆகி வருகிறது. குளத்து பாசன வசதி பெரும் பகுதிகளில் கடந்த 2 மாதத்திற்கு முன்பு சாகுபடி தொடங்கியது. குறிப்பாக பறக்கை, பால்குளம், தேரூர், சுசீந்திரம் உள்ளிட்ட குளங்கள் மூலம் பாசன வசதி பெரும் வயல்பரப்புகளில் சாகுபடி பணி நடந்தது. தற்போது 80 நாட்களை கடந்து நிற்கிறது. மேலும் பறக்கை பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்களில் மழை இல்லாததால், துத்தநாகம் குறைபாடு இருப்பதாக வேளாண்மை அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த குறைபாட்டால், பயிர்களில் மேல் பகுதி மஞ்சளாக காட்சி அளிக்கிறது. இதற்கு போதுமான உரங்கள் போடுவதற்கு விவசாய அதிகாரிகள் பரிந்துரைசெய்துள்ளனர். இந்த பயிர்கள் வருகிற ஆடி மாதங்களில் அறுவடைக்கு தயராகிவிடும்.
ஆனால் ஆற்றுபாசனத்தை நம்பியுள்ள மற்ற வயல்பரப்புகள் அணை திறப்பை எதிர்நோக்கி, கடந்த மே மாதம் மத்தியில் நாற்றங்கால் தயாரிக்கும் பணியை விவசாயிகள் மேற்கொண்டனர். சில பகுதிகளில் ஆற்று தண்ணீர் வந்தபிறகு நாற்றங்கால் தயாரிக்கலாம் என விவசாயிகள் முடிவு செய்து இருந்தனர். கடந்த ஜூன் 1ம் தேதி அணை திறக்கப்பட்டது. நாற்றங்கால் தயாரிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வயர்களில் நாற்றை பிடுங்கி தனியாக சாகுபடி செய்தனர். கால்வாய், சானல்களில் தூர்வாரததாலும், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டதாலும், அணை தண்ணீர் கால்வாய்களில் சீராக செல்லவில்லை. மேலும் கடைவரம்பு பகுதிகளுக்கு அறவே தண்ணீர் செல்லவில்லை. இதனை தொடர்ந்து விவசாயிகள் கால்வாய், சானல்களை தூர்வாரவேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். அதன்பேரில் தற்போது ரூ.5.40 கோடி மதிப்பில் தூர்வாரம் பணி நடந்து வருகிறது.
இந்த பணிகள் இன்னும் ஒருரிரு நாட்கள் முடிந்து தண்ணீர் விடப்படும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணை திறந்தபிறகு கிடைத்த தண்ணீரை கொண்டு வடசேரி, புத்தேரி பகுதியில் தற்போது சாகுபடி பணிகள் நடந்து வருகிறது. ஆனால் கடைவரம்பு பகுதியாக தெங்கம்புதூர், மயிலாடி, இரட்டை கரைசானலை நம்பியுள்ள பகுதிகளில் விவசாயிகள் சாகுபடி பணி தொடங்காமலேயே வயல்களை தரிசாக போட்டுள்ளனர். சில விவசாயிகள் வயல்களை உழுதுபோட்டுள்ளனர். தண்ணீர் கிடைக்காத கடைமடை விவசாயிகள் கூறியதாவது: இன்னும் இரு தினங்களில் தண்ணீர் விடுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். தண்ணீர் வந்தபிறகு சாகுபடி பணியை தொடங்கவேண்டும் என கவலையுடன் தெரிவித்தனர்.