சென்னை: எங்கள் வேட்பாளருக்கு தமிழ் தெரியவில்லை என்பது எனக்கு அவமானமாக இல்லை என சீமான் கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நாடாளுமன்ற தேர்தலில் அக்கட்சி போட்டியிடும் மைக் சின்னத்தை அறிமுகம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: நாம் தமிழர் கட்சி விருதுநகர் வேட்பாளர் கவுசிக் தமிழை திக்கித்திக்கி படித்தது விமர்சிக்கப்படுகிறது. அவர் ஓமன் நாட்டில் படித்தவர். அவருக்கு தமிழ் வரவில்லை. என் பிள்ளைக்கு தமிழ் தெரியவில்லை என்பது எனக்கு அவமானமாக இல்லை. வீழ்வது நாமாகினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்கிற வெற்று முழக்கத்தை முன்வைத்து எங்களை வீழ வைத்தவர்கள்தான் அவமானப்பட வேண்டும்.
நாங்கள் ஏன் அவமானப்பட வேண்டும். என்னுடைய மகன்கள் இருவரும் ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார். தமிழ்நாட்டில் அனைத்து அரசு பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்விதான் நடைமுறையில் இருந்து வருகிறது. அரசு பள்ளிகளில் படிக்க வேண்டும். படிக்காதவர்களுக்கும் அரசு பணி தர வேண்டும் என பேசும் சீமான் தன் பிள்ளைகளை தமிழ் வழி அரசு பள்ளிகளில் சேர்க்காமல் ஆங்கில வழியில் சேர்த்துவிட்டு அதை நியாயப்படுத்துவது சரியானது அல்ல என்று சமூகவலைதளங்களில் பலர் விமர்சிக்கின்றனர்.