‘‘நேத்து உறுப்பினரானவர் இன்னைக்கு வேட்பாளரா? என ரத்தத்தின் ரத்தங்கள் கொதிக்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் தொகுதியில இலைக்கட்சியின் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளரு அவரா, இவரா என்று பல பேரோட பெயர்கள் அடிபட்டு வந்தது. இறுதியில ஒரு கவர்மென்ட் டாக்டரை அழைத்து வந்து வேட்பாளராக அறிவிச்சது கட்சியோட தலைமை. அவர் கட்சியில எந்த பொறுப்பிலயும் இல்லையாம். சமீபத்துலத்தான் கட்சியிலயே உறுப்பினரானாராம். வெயிலூர் தொகுதியில் 6 சட்டத்தோட மன்ற தொகுதிகள்ல வாணி பாடிய ஊரை தவிர அந்த டாக்டரை யாருக்கும் தெரியலையாம். வாக்கு பதிவே வரப்போகுது. இன்னமும் தொகுதியில இலை கட்சியோட மாவட்ட நிர்வாகிங்க தொடங்கி, கீழ்மட்ட நிர்வாகிகள் வரைக்கும், தேர்தல் களத்தில் இறங்காம மந்தமாக இருக்குறாங்களாம். இப்படி இலை கட்சியில ஒரு கோஷ்டி புலம்ப, இன்னொரு கோஷ்டியோ, கட்சிக்கு உழைச்சவங்களுக்கு வாய்ப்பு கொடுப்பாங்கன்னு பார்த்தா.. கட்சியில நேத்து உறுப்பினரா வந்தாரு, இன்னைக்கு வேட்பாளரா என்று அதிருப்திய தெரிவிக்குறாங்களாம். நாடாளும் எலக்ஷன் முடிஞ்ச உடனே இருக்குற இலையும் பறந்துடும்போல இருக்குதேன்னு கட்சிக்குள்ளவே பேசிக்குறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், குற்றவாளிகளுக்கு அட்மிட் போடுவதால் போலீசாருக்கு தலைவலி வந்து விடுகிறதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘குற்ற வழக்குகளில் தொடர்பு உடைய நபர்களை போலீசார் கஷ்டப்பட்டு பிடிச்சு, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்கு முன் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக கொண்டு சென்றால், குற்றம் சாட்டப்பட்ட நபர் கை வலிக்குது, நெஞ்சு வலிக்கிறதுன்னு சொன்னால் அட்மிட் என்று டாக்டர்கள் எழுதி வைத்து விடுகிறார்களாம்.. இதனால் 2, 3 நாள் அந்த நபரை ஆஸ்பத்திரியில் வைத்து போலீஸ் பாதுகாக்க வேண்டி இருக்காம்.. கைதிகளுக்கு என்று தனி சிகிச்சை வார்டு இல்லாததால், பொது சிகிச்சை வார்டில் தான் அனுமதிக்க வேண்டியிருக்கு.. அந்த கைதி கழிவறைக்கு சென்றால் கூட வெளியே போலீசார் காத்திருக்க வேண்டியதிருக்கிறது.. இதுகுறித்து டாக்டரிடம் போலீஸ் கேட்டால், நாங்க என்ன செய்ய முடியும். நெஞ்சு வலிக்கிறது என்று சொல்கிறவரை அட்மிட் போடாமல் விட்டால், நாளைக்கு ஏதாவது நேர்ந்தால் நான்தான் பொறுப்பேற்க வேண்டும்னு கூறி போலீசாரிடம் கடுப்பாக பேசுகிறார்களாம்.. எலக்ஷன் டூட்டி பார்க்கவா, கைதியை பாதுகாக்க போலீசை போடுவதா? என தெரியாமல் தவிக்கும் காக்கிகள், எந்த பக்கம் திரும்பினாலும் காவல் துறையை தான் அடிக்கிறார்கள் என நொந்து போகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தேர்தல் களத்தில் மாம்பழம் பெருசா, தாமரை பெருசா என்ற ஈகோ எட்டிப்பார்க்க ஆரம்பிச்சிருக்காமே…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘ஆமா..வடமாவட்டங்களில் மாம்பழம் போட்டியிடும் சில தொகுதிகளில் தாமரையின் டாமினேஷன் அதிகமா இருக்காம். மாம்பழ வேட்பாளர்களுக்கு ஓட்டுக்கேட்கும் போது தாமரையின் கொடியை அதிகளவில் காட்டி அதகளம் பண்றாங்களாம். இங்க போட்டி போடுறது எங்க வேட்பாளர். அதனால் எங்கள் கொடியும், சின்னமும்தான் பிரதானமாக இருக்கணும் என்கிறார்களாம் மாம்பழ கட்சிக்காரங்க. ஆனால் இது பிரைம் மினிஸ்டருக்கான எலக்ஷன். அவருக்குதான் பப்ளிக் ஓட்டு போடுவாங்க. அதனால எங்க கட்சிக்கொடியை அவங்களுக்கு ஞாபகப்படுத்தியே ஆக வேண்டும் என்பது தாமரையின் வாதமாக இருக்காம். அப்படி இல்லீங்க, வடமாநிலத்தில் நீங்கள் பெரிய கட்சியா இருந்தாலும் தமிழ்நாட்டில் நாங்கதான் உங்களை விட பெரிய கட்சி. அதனால எங்களுக்காகத்தான் சனங்க ஓட்டுப் போடுவாங்க என்று ஆர்க்கியூமென்ட் பண்ணுதாம் மாம்பழ தரப்பு. இதையெல்லாம் பப்ளிக்கில பேசிக்கிட்டு இருக்காதீங்க… அப்புறம் நமக்குள்ள விரிசல் வந்திருச்சின்னு கொளுத்திப் போட்டுருவாங்க. எனவே எலக்ஷன் முடியும் வரை சைலண்டா பேசுங்க என்று மத்தியஸ்தம் செய்யுறாங்களாம் மூத்த நிர்வாகிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘சின்னத்தை சொல்லாமலே ஓட்டு கேட்டாராமே..’’
‘‘டெக்ஸ்டைல்ஸ் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் டெக்ஸ்டைல்ஸ் நாடாளுமன்ற தொகுதி தாமரை சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. தாமரை மாநில தலைவர் பேசும்போது, நமது வேட்பாளருக்கு கட்சியில் வேறு பொறுப்புகள் நான் தரமாட்டேன். அவருக்கு எம்.பி என்ற பொறுப்பை நீங்கள் வழங்க வேண்டும். தேர்தலை பொறுத்தவரை தாமரை மாப்பிள்ளை வீடு, கூட்டணி கட்சியினர் பெண் வீடு என்பது போல், கூட்டணி கட்சி நண்பர்கள் நமக்குள் இருக்கும் சிறு சலசலப்புகள் வந்தாலும் அதனை பெரிதுபடுத்தாமல், ஒரே குடும்பமாக இருந்து தேர்தல் வெற்றிக்காக பாடுபட வேண்டும். நமது வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள் என்று மட்டும் தான் கடைசி வரைக்கும் பேசினாராம். ஆனால் ஒரு தடவை கூட தாமரை சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லவே இல்லை. இதனால் அங்கிருந்த 2ம் கட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் மாநில தலைவர், எந்த சின்னத்திற்கு வாக்கு கேட்கிறார் என்றே கூட தெரியவில்லையே என்று புலம்பி சென்றார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.